/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதம் அடைந்த நிலையில் பொன்விழா ஆண்டு நினைவு துாண்
/
சேதம் அடைந்த நிலையில் பொன்விழா ஆண்டு நினைவு துாண்
ADDED : நவ 10, 2025 12:26 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி பொன்விழா ஆண்டு நினைவு துாண் முழுவதும் சேதம் அடைந்து பராமரிப்பு இன்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது.
சிவகங்கை நகராட்சி கடந்த 2014ல் நகராட்சி துவங்கி 50 ஆண்டுகளான நிலையில் பொன்விழா கொண்டாடினர். அதையொட்டி சிவகங்கை நகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிக்கென ரூ.25 கோடி சிறப்பு நிதியை அப்போதைய முதல்வர் ஜெ., ஒதுக்கினார். குடிநீர், சாலை மேம்பாடு, வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதியை செலவிடவேண்டும் என சில வழிகாட்டுதல் நெறிமுறையும் நகராட்சிகள் நிர்வாகத்துறை வழங்கியது.
இந்நிதியில் சிவகங்கை தாசில்தார் அலுவலக வடக்கு நுழைவு வாயில் அருகே பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக நகராட்சி சார்பில் நினைவு துாண் நிறுவப்பட்டு அதன் சுற்றுச்சுவரில் பல சிற்பங்கள், இருக்கைகள் பூ செடிகள் அமைக்கப்பட்டு மினி பூங்கா அமைத்திருந்தனர். இந்த பகுதியில் மாலை நேரங்களில் முதியவர்கள் இளைஞர்கள் அமர்ந்து தங்களின் பொழுதுகளை கழித்தனர்.
ஆனால் காலப்போக்கில் இவற்றை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் இந்த நினைவுதுாண் முழுவதும் சேதம் அடைந்து புதர்மண்டி காணப்படுகிறது. கல்இருக்கைகள் அனைத்தும் துாசி படிந்து ஆட்கள் உட்கார முடியாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த நினைவு துாணை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

