ADDED : மார் 25, 2024 05:42 AM

தேனி, : மாவட்டத்தில் உள்ள சிவ ஆலங்களில் பங்குனி மாத பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம், நடந்தது.
சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை துவக்கி வைத்தார். அன்பர் பணிக்குழு தலைவர் ஜெயபிரதீப் அன்னதானம் வழங்கினார்.
அன்பர் பணிக்குழு செயலாளர் சிவகுமார், பொருளாளர் விஜயராணி உள்ளிட்டோர் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெரியகுளம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
போடி: போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் ஹரிஸ்குமார் முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர்.போடி ஐய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திர புஷ்பாஞ்சலி பூஜை ஐய்யப்ப பக்த சபை செயலாளர் சங்கிலி காளை, பொருளாளர் பாலு தலைமையில் நடந்தது.
கணபதி ஹோமத்துடன் ஐய்யப்பனுக்கு 108 சங்கினால் அபிஷேகம். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
பக்த சபை நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐய்யப்பனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.

