ADDED : மே 13, 2024 06:44 AM

போடி : வனப்பகுதியில் பல்வேறு பழவகை மரங்கள் அழிந்து வரும் நிலையில் புழு, பூச்சிகளை உண்பதற்காக நீர் நிலைகள் உள்ள போடி கண்மாய் பகுதிகளை நாடி, வவ்வால்கள் வர துவங்கி உள்ளன.
வனப்பகுதியில் அடிக்கடி தீ வைப்பதன் மூலம் ஏராளமான விலை உயர்ந்த, மூலிகை, பழங்களின் வகை மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால் பூச்சிகள், உயிரினங்களும் அழிந்து வருகின்றன.
வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்த வவ்வால்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. போடி பகுதி கண்மாய்களில் நீர் வரத்து குறைந்து உள்ளன. இந்நிலையில் புழு, பூச்சிகள், பழங்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த வவ்வால்கள் தற்போது உணவினை தேடி போடி அருகே பங்காருசாமி கண்மாய் பகுதிகளுக்கு வர துவங்கி உள்ளன.
கண்மாய் பகுதியில் உள்ள புழு, பூச்சிகளையும், அருகே மரங்களில் உள்ள பழங்களையும் உண்பதற்காக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரங்களில் சங்கமித்து உள்ளன. மரங்களில் வவ்வால்கள் தலை கீழாக தொங்கியவாறு உள்ளன. இதனை காண மக்கள் அதிகளவில் வருகை தந்து கண்டு ரசித்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.