/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனமழையால் நிரம்பி வழியும் அணைகள்; மேகமலை ரோட்டின் பல இடங்களில் மண் சரிவு
/
கனமழையால் நிரம்பி வழியும் அணைகள்; மேகமலை ரோட்டின் பல இடங்களில் மண் சரிவு
கனமழையால் நிரம்பி வழியும் அணைகள்; மேகமலை ரோட்டின் பல இடங்களில் மண் சரிவு
கனமழையால் நிரம்பி வழியும் அணைகள்; மேகமலை ரோட்டின் பல இடங்களில் மண் சரிவு
ADDED : அக் 20, 2025 12:14 AM

கம்பம்: மேகமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணலாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பி, உபரி நீர் முல்லைப் பெரியாற்றிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மேகமலையில் நீர்த் தேக்கங்களும், வன உயிரினங்களின் நடமாட்டமும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. எனவே தினமும் சுற்றுலாப் பயணிகள் கணிசமாக வந்து செல்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக மேகமலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. அக்.17 இரவு விடிய விடிய பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல இடங்களில் குறிப்பாக சின்னமனுாரில் இருந்து ஹைவேவிஸ் செல்லும் மலை ரோட்டில் பல இடங்களில் மலைக்குன்றுகளில் இருந்து மண்சரிவு ஏற்பட்டு, ரோடுகளை அடைத்துக் கொண்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் வாகனங்களை வனத்துறை அனுமதிக்கவில்லை.
மணலாறு அணையின் முழு கொள்ளளவு 22 மீட்டராகும் (72 அடி) இரவங்கலாறு அணை மற்றும் ஹைவேவிஸ் அணைகள் தலா 7 மீட்டர் (22.96அடி) ஆகும். இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. உபரி நீரை முல்லைப் பெரியாற்றில் திருப்பி விட்டனர். சராசரியாக 2 அணைகளில் இருந்தும் 300 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இரவங்கலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து எடுக்கும் தண்ணீரை பயன்படுத்தி 30 மெகாவாட் மின் உற்பத்தி பணிகள் நடந்து வருகின்றன. 35 மெகாவாட் முழு உற்பத்தி திறனாகும்.
ஹைவேவிஸ் ரோட்டில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வைரவக்குமார் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினரும், ரேஞ்சர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினரும் நேற்று மண் சரிவுகளை அகற்றி போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். வாகனங்களை மெதுவாக இயக்கி எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.