/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நிறுத்தம்
/
வைகை அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நிறுத்தம்
ADDED : நவ 20, 2024 02:15 AM
ஆண்டிபட்டி:வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் இரு போக பாசன நிலங்களுக்காக ஜூலை 3லும், திருமங்கலம் பிரதான கால்வாய் ஒரு போக பாசன நிலங்களுக்காக செப். 15லும் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வைகை பூர்வீக பாசன நிலங்களுக்காக நவ.10ல் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. வைகை பூர்வீக பாசனப்பகுதி 3க்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவு 1830 மில்லியன் கனஅடி நேற்றுடன் முடிந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக சென்ற நீர் முறை பாசன அடிப்படையில் நேற்று நிறுத்தப்பட்டது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் மட்டும் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 57.61 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1291 கன அடி.
சிவகங்கை, ராமநாதபுரத்திற்கு வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள நிலங்களுக்கு இன்று (நவ.20) முதல் நவ.29 வரை வினாடிக்கு 500 கன அடி வீதம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட இருப்பதாக நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.