/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடத்தலை தடுக்க பெயரளவில் நடந்த அதிகாரிகள் ஆலோசனை
/
கடத்தலை தடுக்க பெயரளவில் நடந்த அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஆக 02, 2025 12:49 AM
கம்பம்: ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பான இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மாதந்தோறும் சடங்கிற்காக பெயரளவில் கம்பத்தில் நடைபெற்றது.
தமிழக கேரள எல்லையோர நகரங்களான கம்பம், கூடலூர், போடி, தேவாரம், கோம்பை உள்ளிட்ட ஊர்களின் மலைப்பாதை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டு தீவனத்திற்கு விற்பனை செய்கின்றனர். கடத்தலை தடுக்க இருமாநில போலீஸ், வருவாய் துறை , வழங்கல் துறை, புட் செல் போலீசார் இணைந்து கம்பத்தில் மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை கம்பத்தில் பெயரளவிற்கு கூட்டம் நடந்தது.
கடத்தல் தொடர்ந்தாலும் மாநில எல்லைகளில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் சோதனை செய்வது இல்லை. புட்செல் போலீசாரும் கண்டுகொள்வது இல்லை. பின் எதற்காக மாதந்தோறும் கூட்டம் நடக்கிறது என கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள போலீஸ் ஒருவர் கமெண்ட் அடித்து சென்றார்.
இந்த கூட்டடங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செயல்பாட்டிற்கு வருவது இல்லை.இரு மாநில போலீசார் இடையே தகவல் பரிமாற்றம், இணைந்து சோதனை செய்வது என்பதெல்லாம் தீர்மானங்களோடு நின்று விடுகிறது. எனவே பெயருக்கு கூட்டம் நடத்தாமல் கடத்தலை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச் செல்வி, பீர்மேடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மோகனன், குமுளி எஸ்.ஐ . ஜமாலுதீன் உள்ளிட்ட இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.