ADDED : ஆக 25, 2025 01:27 AM

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் கடந்த மூன்று நாட்களாக மழை குறைந்து இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மூணாறில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. குறிப்பாக சுதந்திர தினம், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் பலத்த மழையால் திட்டமிட்டபடி பயணத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆக.18க்கு பிறகு மழை படிப்படியாக குறையத்துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக மழை இன்றி இதமான காலநிலை நிலவியது. மிதமான வெயிலுடன், அவ்வப்போது திரண்ட மேகக் கூட்டங்கள் என மாறுபட்ட சூழல் இருந்தது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு, பள்ளிவாசல் எஸ்டேட், இரண்டாம் மைல் ஆகிய பகுதிகளில் காலையில் மேகங்கள் தவழ்ந்து ரம்யமாக காட்சியளித்தது. இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.