கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
தேனி: பவர்ஹவுஸ் தெரு இப்ராஹிம்ஷா 52, சமதர்மபுரம் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்கடைக்கு அருகில் இறைச்சி கடையில் பணிபுரிபவர் முத்துசெல்வம். இவர் இப்ராஹிம்ஷாவிடம் கடனாக பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் பணம் கேட்ட போது, பணம் இல்லை என இப்ராஹிம்ஷா கூறினார். இதனால் முத்துசெல்வம் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் இருந்து கடைக்காரர் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
தேனி: தாடிச்சேரி தெற்கு தெரு முத்துமாரி 21, இவருக்கு சில மாதங்களுக்கு உத்தமபாளையம் முத்துக்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை பிடிக்கவிலை என கூறி தாய் பழனியம்மாளுடன் தாடிச்சேரியில் வசித்து வந்தார். தாய் அறிவுரை கூறி கடந்த மாதம் மகளை அவர் கணவர் வீட்டில் விட்டு வந்தார்.
முத்துமாரி மீண்டும் தாடிசேரி வந்து, கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனியம்மாள் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இடப்பிரச்னையில் தகராறு செய்தவர் கைது
தேனி: சுக்குவாடன்பட்டி ஜெகன் 29, மருந்துகடை வைத்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாபு, இவரது மகன் பாலாஜி ஆகியோருடன் இடப்பிரச்சனை உள்ளது. இந்நிலையில் செப்.,19 இரவில் பாபு, பாலாஜி இணைந்து ஜெகன் வீட்டிற்கு நுழைந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, தண்ணீர் குழாய் சேதப்படுத்தினர். இதனை தட்டி கேட்ட ஜெகனுக்கு கொலைமிரட்டல் விடுத்து சென்றனர். ஜெகன் புகாரில் அல்லிநகரம் போலீசார் பாலாஜியை கைது செய்தனர். பாபுவை தேடி வருகின்றனர்.
மண் திருடிய இருவர் மீது வழக்கு
தேனி: அன்னஞ்சி பைபாஸ் அருகே தேனி மண்டல துணை தாசில்தார் ராஜாராம், ஆர்.ஐ., துர்காதேவி அவ்வழியாக கரம்பை மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தினர். மண் கொண்டு செல்வதற்கான நடைசீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டனர். உரிமையாளரிடம் அனுமதி சீட்டு உள்ளதாக தெரிவித்தனர். உரிமையாளரிடம் அனுமதி சீட்டு இல்லை. ராஜாராம் அல்லிநகரம் போலீசில் புகாரில் வடபுதுபட்டி பிச்சை, சரவணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.