ADDED : மே 19, 2025 05:50 AM
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
கடமலைக்குண்டு: பொன்னம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராமன் 34. தேனியில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இரு நாட்களுக்கு முன், மலைராமன் தனது குடும்பத்துடன் மூலக்கடையில் உள்ள அவரது, உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மலைராமனின் 11 வயது மகன், உறவினர் வீட்டில் இருந்த டேபிள் பேனை ஆன் செய்வதற்காக ஒயரை எடுத்து, மின் சுவிட்ச் பாக்ஸில் மாட்டிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சுய நினைவு இழந்தார். உடனடியாக மலைராமன், அவரது உறவினர்கள் கடமலைக்குண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிகின்றனர்.
வனத்துறை வாகனம் மோதி ஒருவர் காயம்
தேனி: தேனி கம்பம் ரோடு பள்ளிவாசல் தெரு பாபு 45. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் காயமடைந்தார். இதனால் இடது கால் துண்டிக்கப்பட்டு, 'ஸ்டிக்' வைத்து நடந்து வருகிறார். பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து ரோட்டை கடந்தார். அவ்வழியாக வந்த வனத்துறை வாகனம் மோதி காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது மனைவி கலாவதி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.