ADDED : ஜூன் 23, 2025 05:56 AM
பெண் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
தேனி: அரண்மனைப்புதுார் கிழக்கு தெரு கட்டட தொழிலாளி தேவி 38. இவர் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு, உடன் பணிபுரியும் ஒருவருடன் சென்று வந்தார். இந்நிலையில் அந்த நபருடன், தேவி விடுதியில் தங்கிய வீடியோ பதிவு உள்ளதாக தேவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாரியம்மாள், மிரட்டினார். மேலும் வெளியில் கூறாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டார். தேவி ரூ.2 லட்சம் பணம், 7 பவுன் தங்க நகைகளை வழங்கினார். மீண்டும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினார். இந்நிலையில், 'அப்படி ஒரு வீடியோ பதிவு இல்லை' என, தேவிக்கு தெரிந்தது. இந்நிலையில் மாரியம்மாளிடம் வழங்கிய நகை பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுதவதாக அவரது மகன் தமிழ் அன்பழகன், தேவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். தேவி புகாரில் தாய் மாரியம்மாள்40, மகன் தமிழ்அன்பழகன் 23, ஆகிய இருவர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
டூவீலர், ஆட்டோவுக்கு தீ
தேனி: பூதிப்புரம் ராமக்காரன் தெரு மாரியம்மாள். இவரது கணவர் பாலமுருகன். ஜூன் 20 இரவு இவர்களது வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்க்கையில் இவர்களுக்கு சொந்தமான ஆட்டோ, டூவீலர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பின் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். மாரியம்மாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
தேனி: பெரியகுளம் போலீஸ் எஸ்.ஐ., தெய்வக்கண்ணன். இவருக்கு வத்தலகுண்டு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாக்கடைப் பாலத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்தில் சோதனை செய்தனர். அங்கிருந்து டூவீலரில் தப்பிச் செல்ல முயன்ற இந்திராபுரி தெரு செல்லப்பாண்டியை 40, விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். பின் அவரிடம் இருந்த கஞ்சா, டூவீலர் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
தேனி: தேவதானப்பட்டி வெங்கடாசல செட்டியார் தெரு தேவிகா. கடந்தாண்டு இவரது கணவர் மன்மதன் கொலை செய்யப்பட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மஞ்சளாறு அணை செல்லும் ரோட்டில் உள்ள மாமனாருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு சென்றார். அங்கிருந்த மாமியார் செல்லம்மாள், அவரின் மகள் மலர்விழி, உறவினர் அர்ஜூனன் இருந்தனர். தோப்பில் தேவிகாவின் உடைகளை கிழித்து, மானபங்கம் செய்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தேவிகா புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அரிவாளால் தாக்கிய ஐவர் மீது வழக்கு
தேனி: பெரியகுளம் சருத்துப்பட்டி எம்.ஜி.ஆர்.,காலனி மார்தாண்டம் 60. கூலி தொழிலாளி. இவரது மருமகன் அழகுமலை. அப்பகுதி கோயில் திருவிழாவில் டூவீலர் நிறுத்துவதில் அப்பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவருடன் மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் சருத்துப்பட்டி அரசுப்பள்ளி அருகே நின்றிருந்த அழகுமலை, அவரது உறவினர் உத்திரம் ஆகிய இருவரை தங்கப்பாண்டி, அவரது மனைவி அழகம்மாள், மகன் சரவணக்குமார், இவரது தம்பி தங்கமுருகன், மனைவி சுமதி இணைந்து அரிவாளால் தாக்கினர். இதனை தடுக்க வந்த மார்த்தாண்டத்தையும் கம்பியால் தாக்கினர். காயமடைந்தவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்தனர். பாதிக்கப்பட்ட மார்த்தாண்டம் புகாரில் தென்கரை போலீசார் தங்கப்பாண்டி உட்பட ஐவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தற்கொலை
தேனி: குள்ளப்புரம் அருகே கோவில்புரம் தெற்கு தெரு பேக்கரி மாஸ்டர் ஆனந்தன் 25. அதிக குடிப்பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.