/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராமநாதபுரம் பாசன நீர் திறப்பு நிறுத்தம்
/
ராமநாதபுரம் பாசன நீர் திறப்பு நிறுத்தம்
ADDED : நவ 02, 2025 02:23 AM
ஆண்டிபட்டி: ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் அக்.27 ல் 70.24 அடி வரை உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி). இதனைத்தொடர்ந்து அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2500 கன அடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காலை 10:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1990 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1280 கன அடி, 58 ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.
நீர்வளத்துறையினர் கூறியதாவது: கடந்த 5 நாட்களில் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 624 மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் நவ., 6 முடிய 5 நாட்களில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 772 மில்லியன் கன அடி நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்படும் என்றனர்.

