/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகளிடம் இருந்து தப்பிய பள்ளி மாணவர்கள்
/
காட்டு யானைகளிடம் இருந்து தப்பிய பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 17, 2025 11:51 PM
மூணாறு: இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே காட்டு யானைகள்  வழி மறித்ததால்  பள்ளி மாணவர்கள் வீடு திரும்ப இயலாமல் தவித்தனர்.
சாந்தாம்பாறை அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கோழிப்பனக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சேனாபதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் கோழிப்பனகுடியில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரம் காட்டு வழியாக நடந்து பன்னியாறு பகுதிக்கு வந்து, அங்கிருந்து பள்ளி வாகனத்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கோழிப்பனகுடி பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை கூட்டம் முகாமிட்டன. அதனால் வீடு திரும்பும்  பள்ளி மாணவ, மாணவிகள் காட்டு யானைகளிடம் சிக்கி விடக் கூடாது என சிலர்  யானைகளை கண்காணிக்கச் சென்றனர். அவர்களை காட்டு யானைகள் தாக்க முயன்றதால் தப்பி ஓடி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய கோழிப்பனகுடியைச் சேர்ந்த ரவியின் பிள்ளைகள் பவித்ரா, ரஞ்ஜித், ராஜபிரபுவின்  மகன் கார்த்தி ஆகியோர் காட்டு வழியாக நடந்து சென்றபோது  காட்டு யானை கூட்டம் வழியில் நின்றது. அதனை பார்த்து அச்சம் அடைந்தவர்கள் கடந்து செல்ல இயலாமல் தவித்தனர்.
அப்பகுதியினர் தகவல் அறிந்து பட்டாசு வெடித்து காட்டு யானை துரத்திய பிற மாணவர்களை மீட்டு மாலை 6:30 மணிக்கு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மூவரும் 3 முதல் 5ம் வகுப்பை சேர்ந்தவர்களாகும்.

