/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஷ வாயு தாக்கி மாநகராட்சி பணியாளர் பலி
/
விஷ வாயு தாக்கி மாநகராட்சி பணியாளர் பலி
ADDED : ஆக 12, 2024 03:35 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சியில் ஜெ.பி.எஸ்டேட் பகுதியில் 'ஜெட் ராடிங்' இயந்திரம் வாயிலாக பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணி, இரு நாட்களாக நடந்து வந்தது.
இந்த பணியில், ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று மதியம் 12:00 மணிக்கு, ஆவடி, அருந்ததிபுரத்தைச் சேர்ந்த கோபிநாத், 25, என்பவர், 'ஜெட் ராடிங்' இயந்திரத்தை இறக்கி, பாதாள சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது விஷவாயு தாக்கி, கோபிநாத் பாதாள சாக்கடையினுள் மயங்கி விழுந்துள்ளார். சக ஊழியர் அவரை மீட்க முயற்சித்தனர்; ஆனால் முடியவில்லை.
விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்களில், இளவரசன் என்பவர் பாதுகாப்பு உடை அணிந்து, 20 அடி ஆழ பாதாள சாக்கடைக்குள் இறங்கி, கோபிநாத்தை மீட்டார். உடனடியாக, ஆவடி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்ததில் கோபிநாத் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதை, மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சம்பவ இடத்தில், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வழக்கு பதிவு செய்த ஆவடி போலீசார், ஒப்பந்த நிறுவன மேலாளரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி மற்றும் ஆவடி, ஜெ.பி.எஸ்டேட்டைச் சேர்ந்த மேற்பார்வையாளர் ஆனந்த் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கோபிநாத்துக்கு, மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
ஓராண்டில் 4 பேர் பலி
ஆவடி மாநகராட்சியில், ஓராண்டிற்குள் ஒப்பந்த ஊழியர்கள் மூவர் உட்பட நான்கு பேர், விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆவடி, கிரி நகரில் கடந்தாண்டு செப்., 7ம் தேதி, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, பட்டாபிராமைச் சேர்ந்த மோசஸ், 45, மற்றும் ஆவடியைச் சேர்ந்த தேவன், 50, ஆகியோர் உயிரிழந்தனர்.
கடந்த ஜன., 22ம் தேதி, திருமுல்லைவாயில், தனியார் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில், மோட்டார் இறக்கும்போது விஷவாயு தாக்கி, சோழம்பேடு சுரேஷ், 48, என்பவர் உயிரிழந்தார். அந்த வரிசையில் கோபிநாத்தின் பலியும் பதிவாகி உள்ளது.