/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திப்பட்டில் குப்பையை அகற்றாமல் மணலால் மூடுவதா? -தீர்ப்பாயம் அதிருப்தி
/
அத்திப்பட்டில் குப்பையை அகற்றாமல் மணலால் மூடுவதா? -தீர்ப்பாயம் அதிருப்தி
அத்திப்பட்டில் குப்பையை அகற்றாமல் மணலால் மூடுவதா? -தீர்ப்பாயம் அதிருப்தி
அத்திப்பட்டில் குப்பையை அகற்றாமல் மணலால் மூடுவதா? -தீர்ப்பாயம் அதிருப்தி
ADDED : ஆக 31, 2024 11:00 PM
சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் உள்ள அத்திப்பட்டில், கொட்டப்பட்ட குப்பையை அகற்றாமல் மணலால் மூடப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, அத்திப்பட்டு கிராமத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
'எனவே, குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பையை அகற்றவும் உத்தரவிட வேண்டும்' என, தீர்ப்பாயத்தில் குமரேசன் சூளூரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'அத்திப்பட்டு கிராமத்தில் குப்பை கொட்டப்படும் பகுதி, கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் உள்ளது.
எனவே, அங்கு குப்பை கொட்டுவதை உடனே நிறுத்துவதுடன், அங்குள்ள குப்பையை அகற்ற வேண்டும்' என, அத்திப்பட்டு ஊராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
அத்திப்பட்டில் குப்பை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றாமல், மணலை கொட்டி மூடுவதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார்.
எனவே, அங்கீகரிக்கப்படாத இடத்தில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 27ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.