/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறு அளவிலான ஜவுளி பூங்கா 50 சதவீதம் அரசு மானியம்
/
சிறு அளவிலான ஜவுளி பூங்கா 50 சதவீதம் அரசு மானியம்
ADDED : ஆக 28, 2024 08:10 PM
திருவள்ளூர்:சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க, 50 சதவீதம் அரசு மானியம் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோருக்கு 50 சதவீதம் மானியம் அல்லது 2.50 கோடி ரூபாய் வரை தமிழக அரசு நிதி உதவி வழங்குகிறது.
இவ்வாறு அமையவுள்ள ஜவுளி பூங்கா, குறைந்தபட்சம் மூன்று தொழிற்கூடங்களுடன், 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இந்த சிறிய ஜவுளி பூங்காவில் சாலை வசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால், நீர் வினியோகம், தெருவிளக்கு, மின்சார வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்.
ஆய்வுக் கூடம், வியாபார மையம், கிடங்கு வசதி, குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர் விடுதி, அலுவலகம் மற்றும் இதர வசதிகளும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, 'மண்டல துணை இயக்குனர், துணிநுால் துறை, சேலம்' என்ற முகவரியில் அணுகலாம். மேலும், 0427- - 2913006 என்ற எண்ணிலோ அல்லது dtextilessalemregional@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரியிலும் தகவல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.