/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விரிவாக்க பகுதியில் எச்சரிக்கை பதாகை வைப்பு
/
சாலை விரிவாக்க பகுதியில் எச்சரிக்கை பதாகை வைப்பு
ADDED : மார் 11, 2025 12:11 AM

திருத்தணி, திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், தலையாறிதாங்கல் முதல் கே.ஜி.கண்டிகை அடுத்த பீரகுப்பம் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, 21.50 கோடி ரூபாயில், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினரால் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
சாலை விரிவாக்கம் நடக்கும் பகுதியில், தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகை வைக்காமல் பணிகள் நடந்து வந்ததை, கடந்த 7ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அன்று மாலை, கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசு பேருந்து மீது, டாரஸ் லாரி மோதி, நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 30க்கும்மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றும் நம் நாளிதழில் சாலை விரிவாக்கத்தின் போது தடுப்புகள், அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என, திருத்தணி ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்த செய்தியும் வெளியானது.
இதன் எதிரொலியாக,திருத்தணி நெடுஞ் சாலைத் துறையினர், கே.ஜி.கண்டிகை சாலை விரிவாக்கம் செய்யும் பகுதியில், சவுக்கு கம்பு நடப்பட்டு, அதற்கு எச்சரிக்கை ரிப்பன் கட்டியும், நெடுஞ்சாலை பணிகள் நடப்பதால் வாகனங்கள் மெதுவாக செல்லவும் என, சாலையின் இருபுறமும் அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். தற்போது, இந்த அறிவிப்பு பதாகையால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.