/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
30 ஆண்டுகளுக்கு பின் வீட்டுமனை பட்டா...அப்பாடா! திருத்தணியில் 3,000 குடும்பத்திற்கு விடிவு
/
30 ஆண்டுகளுக்கு பின் வீட்டுமனை பட்டா...அப்பாடா! திருத்தணியில் 3,000 குடும்பத்திற்கு விடிவு
30 ஆண்டுகளுக்கு பின் வீட்டுமனை பட்டா...அப்பாடா! திருத்தணியில் 3,000 குடும்பத்திற்கு விடிவு
30 ஆண்டுகளுக்கு பின் வீட்டுமனை பட்டா...அப்பாடா! திருத்தணியில் 3,000 குடும்பத்திற்கு விடிவு
ADDED : ஜன 31, 2025 02:47 AM

திருத்தணி திருத்தணி நகராட்சியில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வந்த, 3,000 குடும்பத்தினருக்கு, 30 ஆண்டுகளுக்கு பின், மாவட்ட வருவாய் துறையினர் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். அதுகுறித்த கணக்கெடுக்கும் பணியில், திருத்தணி வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி, மொத்தம் 12.42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
இங்கு, 21 வார்டுகளில் உள்ள, 510 தெருக்களில், 14,100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில், 4,500 பேர் கிராம நத்தத்திலும், 3,600 பேர் அரசு புறம்போக்கு நிலத்திலும், மீதமுள்ள 6,000 பேர் பட்டா நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
குறிப்பாக, நேரு நகர், வள்ளி நகர், அக்கைய்ய நாயுடு சாலை, கண்ண பிரான் நகர், இந்திரா நகர், தொலைபேசி எக்சேஞ்ச் பின்புறம், நரசிம்ம சுவாமி கோவில் தெரு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில், அரசுக்கு சொந்தமான பாறை புறம்போக்கு, மலை புறம்போக்கு, அனாதீன நிலம், மேய்ச்சல் புறம்போக்கு போன்ற வகைப்பாடு உள்ள நிலங்களில், 3,600 குடும்பத்தினர், வீடுகள் கட்டி, 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும், தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்.
மேற்கண்ட பகுதிவாசிகள், தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்குமாறு, பல ஆண்டுகளாக தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், கலெக்டர், தொகுதி எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும்முதலமைச்சர் வரை, தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வந்தனர்.
ஆனாலும், இதுவரை வீடுகளுக்கு பட்டா கிடைக்காமல், அரசு நலத்திட்ட உதவிகள், வங்கிக்கடன் மற்றும் தனிநபர் கடனுதவிகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இதுதவிர, தங்களது வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு, சில மாதங்களுக்கு முன், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி நிரந்தரமாக வசித்து வருவோருக்கு இலவச பட்டா வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்தது.
அதை தொடர்ந்து, கலெக்டர் பிரபுசங்கர், கடந்த மாதம் திருத்தணி நகராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி வசிப்போருக்கு உடனடியாக இலவச பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவித்திருந்தார்.
மேலும், அரசு நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வருவோர் குறித்து கணக்கெடுத்து, பட்டியல் தயார் செய்து தருமாறு, திருத்தணி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், மேற்கண்ட நகர்களில் வசிப்போர் குறித்தும், எத்தனை ஆண்டுகளாக உள்ளனர் என்பது குறித்தும், திருத்தணி தாசில்தார் மலர்விழி தலைமையில், வருவாய் துறையினர் வீடு, வீடாக சென்று விபரங்கள் சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து, திருத்தணி வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:
திருத்தணி நகராட்சியில், மேற்கண்ட நகர்களில் வீடுகள் கட்டி வசிப்போர் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இவர்களில், குறைந்த பட்சம் வீடுகள் கட்டி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக வசிப்போருக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்கள்வழங்கப்படும்.
வணிக ரீதியான கட்டடங்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது. மேலும், வீடுகள் கட்டி விட்டு அங்கு வசிக்காதோருக்கும் பட்டா வழங்க முடியாது.
கணக்கெடுப்பு பணிகளை, ஒரு வாரத்திற்குள் முடிக்குமாறு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்னும் மூன்று மாதத்திற்குள், தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில், 3,000 பேர் பயனடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.