/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆங்கர் செய்தி கடற்கரை சாலையில் மணல் குவிந்து போக்குவரத்து பாதிப்பு: தடுப்புச்சுவரும் உடைந்ததால் மீனவர்கள் அச்சம்
/
ஆங்கர் செய்தி கடற்கரை சாலையில் மணல் குவிந்து போக்குவரத்து பாதிப்பு: தடுப்புச்சுவரும் உடைந்ததால் மீனவர்கள் அச்சம்
ஆங்கர் செய்தி கடற்கரை சாலையில் மணல் குவிந்து போக்குவரத்து பாதிப்பு: தடுப்புச்சுவரும் உடைந்ததால் மீனவர்கள் அச்சம்
ஆங்கர் செய்தி கடற்கரை சாலையில் மணல் குவிந்து போக்குவரத்து பாதிப்பு: தடுப்புச்சுவரும் உடைந்ததால் மீனவர்கள் அச்சம்
ADDED : நவ 29, 2024 01:17 AM

பழவேற்காடு:பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில், மணல் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதோடு, மண் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புச்சுவர் உடைந்ததால், கடல் நீர் கிராமங்களை சூழும் அபாயத்தால், மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு -- காட்டுப்பள்ளி இடையேயான, 13 கி.மீ., சாலை, வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி கிழக்கு கடற்கரை சாலையாக அமைந்துள்ளது.
இந்த சாலை பழவேற்காடில் துவங்கி, லைட்அவுஸ்குப்பம், வைரவன்குப்பம், காளஞ்சி, கருங்காலி உள்ளிட்ட, 15 மீனவ கிராமங்கள் வழியாக பயணித்து, சென்னை எண்ணுார் மற்றும் அத்திப்பட்டு பகுதிகளுடன் இணைகிறது.
லைட்அவுஸ்குப்பம், தாங்கல்பெரும்புலம், காட்டுப்பள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளின் எல்லையில், இச்சாலை இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் உள்ளது.
சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு கரடு, முரடாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், காளஞ்சி, கருங்காலி ஆகிய கிராமங்கள், கடற்கரைக்கு மிக அருகே அமைந்துள்ளன.
கடல் சீற்றம் அதிகரிக்கும் நேரங்களில், ராட்சத அலைகளால் கடற்கரை மணலுடன், கடல்நீர் சாலையில் வந்து குவிகிறது.
தற்போது, வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக, ராட்சத அலைகள் மேலேழும்பி, கடற்கரை மணல் சாலையில் மலைபோல் குவிந்துள்ளது.
காளஞ்சி கிராமத்தில் கடல் அரிப்பு மற்றும் கடற்கரை மணல் சாலையில் குவிவதை தடுக்க அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புச்சுவர், ராட்சத அலையின் காரணமாகவும், மண் அரிப்பாலும் பலவீனமடைந்து, துண்டு துண்டுகளாக உடைந்து உள்ளன.
இதனால், கடல் நீர், அருகே உள்ள பகிம்ஹாம் கால்வாய் வழியாக மீனவ கிராமங்களை சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலை முழுதும் மணல் குவிந்து கிடப்பதால், போக்குவரத்து பாதித்துள்ளது. கார், வேன் உள்ளிட்டவை இந்த பகுதியை கடக்க முடியாமல் மீஞ்சூர், பொன்னேரி வழியாக மாற்று வழித்தடத்தில், 30 - 40 கி.மீ., சுற்றிக்கொண்டு பயணிக்கின்றன.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் நீண்டதுார பயணத்தால் ஏற்படும் நேர விரயம் மற்றும் கூடுதல் எரிபொருள் செலவை எண்ணி, குவிந்து கிடக்கும் மணலில் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.
இந்த கிழக்கு கடற்கரை சாலையை, மீனவ கிராமங்களில் உள்ளவர்கள் மட்டுமின்றி, அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி, எண்ணுார், வல்லுார் ஆகிய பகுதிகளில் அமைத்திருக்கும் அனல் மின் நிலையங்கள், பெட்ரோலிய மற்றும் எரிவாயு முனையங்கள், துறைமுகங்கள் ஆகிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் பயணிக்கின்றனர்.
கடல் சீற்றம், புயல் காலங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும், அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் கடல் அலைகள் அதிகரித்து, சாலையில் மணல் குவிவது வாடிக்கையாக இருப்பதாகவும், இதனால் போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கூறியதாவது:
சேதமடைந்த சாலை மற்றும் அடிக்கடி கடற்கரை மணலும் குவிவதால், இருசக்கர வாகனங்களை மணலில் தள்ளிக்கொண்டு செல்லும்போது, உதிரிபாகங்கள் சேதமடைகின்றன.
இந்த சாலை ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, மாநில நெடுஞ்சாலைத் துறையின் இதர மாவட்ட சாலைகள் பிரிவிற்கு மாற்றப்பட்டு, ஓராண்டு ஆகிறது.
ஆனால், தற்போது வரை சாலையை சீரமைக்கவும், மணல் குவியலை அகற்றவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்கள் கூட வந்து செல்ல முடியாத அவலநிலை உள்ளது.
நிரந்தர தீர்வு காணும் வகையில், கடற்கரை மணல் குவியும் இடங்களில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது, கான்கிரீட் தடுப்புச்சுவரும் உடைந்து கிடப்பதால், கடல்நீர் பகிங்ஹாம் கால்வாய் வழியாக புகுந்து, கிராமங்களை சூழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அதிகாரிகள் உடனடியாக இங்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடல் அரிப்பை தடுக்க, இப்பகுதிகளில் பாறை கற்கள் வைத்து பலப்படுத்த வேண்டும். குவிந்து கிடக்கும் மணலை உடனடியாக அகற்றி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.