/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை பணியில் சமாதியான குடிநீர் 'பம்ப்' ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அடாவடி
/
சாலை பணியில் சமாதியான குடிநீர் 'பம்ப்' ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அடாவடி
சாலை பணியில் சமாதியான குடிநீர் 'பம்ப்' ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அடாவடி
சாலை பணியில் சமாதியான குடிநீர் 'பம்ப்' ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அடாவடி
ADDED : ஜூலை 07, 2025 02:46 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சி, 46வது வார்டு, பெரியார் நகர், நாசர் தெருவில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு,10 ஆண்டுகளுக்கு முன், 35 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, கை 'பம்ப்' அமைக்கப்பட்டது.
மழைக்காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது, பகுதிவாசிகள் இந்த கை பம்பில் தண்ணீர் இறைத்து பயன்படுத்தி வந்தனர்.
பாலேரிப்பட்டு ஏரியை ஒட்டி அமைந்துள்ள இந்த தெருவில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை போடப்பட்டது. அதன் பின், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்களால், அந்த சாலை குண்டும் குழியுமாக மாறியது.
இதையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன், மாநகராட்சி சார்பில் இங்கு சிமென்ட் சாலை போடப்பட்டது.
சாலை அமைக்கும் போது, அங்கிருந்த கை 'பம்ப்'பை சுற்றி, சிமென்ட் கலவை கொட்டி மூடிவிட்டனர்.
இதனால், பொதுமக்கள் கை பம்ப்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஆழ்துளை கிணற்றின் குழாயை துார்வாரி, கை 'பம்ப்'பை உயர்த்தி, பின் சாலை அமைத்திருக்கலாம். அதை விடுத்து, கை பம்புடன் சிமென்ட் சாலை அமைத்துள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் துவங்கும் நிலையில், பயன்பாட்டில் இருந்த குடிநீர் 'பம்ப்'புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சமாதி கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.