/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மப்பேடு - பூந்தமல்லி இடையே மாநகர பேருந்து இயக்கம்
/
மப்பேடு - பூந்தமல்லி இடையே மாநகர பேருந்து இயக்கம்
ADDED : அக் 01, 2025 01:26 AM

மப்பேடு:மப்பேடு - பூந்தமல்லி இடையே மாநகர பேருந்து நேற்று இயக்கப்பட்டது.
கடம்பத்துாரில் இருந்து மப்பேடு வழியாக காஞ்சிபுரத்திற்கு விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வழியே மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென மாணவ- மாணவியர் மற்றும் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மப்பேடு பகுதியிலிருந்து கொட்டையூர், புதுப்பட்டு, பண்ணுார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் வழித்தடத்தில் பூந்தமல்லிக்கு தடம் எண் 578 எம் என்ற புதிய அரசு மாநகர பேருந்து இயக்கப்பட்டது.
திருவள்ளூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ, ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பூந்தமல்லி மாநகர பேருந்து கழக பொதுமேலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிராந்திய மேலாளர் மணிவண்ணன், கிளை மேலாளர் கோபி சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநகர பேருந்து பூந்தமல்லியில் இருந்து காலை 6:45, 10:50, மதியம் 3:10, இரவு 7:15 மணிக்கு புறப்படும் இதேபோல் மப்பேடில் இருந்து காலை 8:35, மதியம் 1:00, மாலை 5:15, இரவு 9:15 மணிக்கு புறப்படும் என, மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.