/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் தடையை மீறி இயக்கப்படும் கன்டெய்னர் லாரிகள்
/
பொன்னேரியில் தடையை மீறி இயக்கப்படும் கன்டெய்னர் லாரிகள்
பொன்னேரியில் தடையை மீறி இயக்கப்படும் கன்டெய்னர் லாரிகள்
பொன்னேரியில் தடையை மீறி இயக்கப்படும் கன்டெய்னர் லாரிகள்
ADDED : பிப் 15, 2025 01:11 AM

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில், எண்ணுார், அதானி ஆகிய துறைமுகங்கள் மற்றும் கன்டெய்னர் முனையங்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள் தச்சூர் - -பொன்னேரி - -மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலை வழியாக பயணிக்கின்றன.
இவற்றால், காலை, மாலை நேரங்களில், பொன்னேரி மற்றும் மீஞ்சூர் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கனரக வாகனங்களால், அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி, தச்சூர்- - பொன்னேரி- - மீஞ்சூர் சாலையில், காலை 7:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரவு 9:00 முதல், மறுநாள் காலை 7:00 மணி வரை இந்த வழித்தடத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.
தடையை மீறும் கனரக வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டத்தின்படி, இரு பிரிவுகளில், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
தடையை அமல்படுத்துவதற்காக இரண்டு, மூன்று நாட்கள் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்பின், கண்காணிப்பு இல்லாததால், உத்தரவை பின்பற்றாமல், தடையை மீறி கனரக வாகனங்கள், பொன்னேரி நகரப்பகுதி வழியாக தொடர்ந்து பயணிக்கின்றன.
பகல் நேரங்களில் கன்டெய்னர் லாரிகள் நகரப் பகுதிக்குள் வராமல் இருந்ததால், மற்ற வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் பயணித்து வந்தனர். தற்போது, தடையை மீறி, அவை பயணிப்பதால் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கண்துடைப்பிற்கு உத்தரவு பிறபித்து, கண்காணிக்கப்படாமல் இருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, பகல் நேரங்களில் கனரக வாகனங்களுக்கான தடையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.