/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
பழவேற்காடில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : அக் 15, 2024 11:59 PM

பழவேற்காடு:வங்ககடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
இதனால் கடலோர கடற்கரை மாவட்டங்களில் மிக கனமழைக்கும், வங்ககடலில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் கடலோர பகுதியான பழவேற்காடில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடலில் சீற்றம் அதிகமாக இருக்கிறது. ராட்சத அலைகள், 10 - 15 அடி வரை எழும்புவதால் கடற்கரை பகுகளில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடல் அரிப்பு காரணமாக, கடலுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்குமான இடைவெளி குறைந்து உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஏரியின் கரையோரங்களில் இருக்கும் படகுகள் மற்றும் வலைகள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்ப்பட்டு, கயிறுகள் உதவியுடன் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.
பழவேற்காடு ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம் மீனவ கிராமங்களை சூழ்ந்து உள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மழைபொழிவு அதிகம் இருக்கும் நிலையில், குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் உருவாகி உள்ளது.
மீன்வளத்துறையினர் எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த இரு தினங்களாக மீனவர்கள் மீன்பிடி தொழிலை தவிர்த்து உள்ளனர். மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகள் பணியின்றி ஓய்வெடுக்கின்றன.
மீன்பிடி படகுகள், வியாபாரிகள், மீன்களை பதப்படுத்தும் வாகனங்கள், மீன்மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் மீன் இறங்குதளம் பகுதி, வெறிச்சோடி கிடக்கிறது. கனமழையால் பழவேற்காடு மீனவப்பகுதியில் மீனவர்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலம் பாதித்து உள்ளது.
மீன்வளம், கடலோர காவல்படை மற்றும் வருவாய்த்துறையினர் பழவேற்காடில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.