/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் வேகமாக பரவுது 'டெங்கு' காய்ச்சல்
/
திருவாலங்காடில் வேகமாக பரவுது 'டெங்கு' காய்ச்சல்
ADDED : அக் 16, 2025 09:46 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில், 'டெங்கு' காய்ச்சல் பரவுவதால், பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, மணவூர், காவேரிராஜபுரம் உள்ளிட்ட 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்டு, 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. குறிப்பாக, பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்கிறது. மேலும், அவ்வப்போது பனிப்பொழிவும் இருந்து வருகிறது.
தட்ப வெப்பநிலை மாற்றத்தால், சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்ற பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, திருவாலங்காடு கிராம மக்கள் கூறியதாவது:
தட்ப வெப்பநிலை மாற்றத்தால், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு, ஊராட்சி சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். திருவாலங்காடு ஒன்றியம் முழுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே பரவுகிறது. அரசு மருத்துவமனைக்கு செல்ல பயந்து பலரும் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு, வைரஸ் காய்ச்சல் என, சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின் டெங்கு என தெரிய வருகிறது.
மருத்துவமனைக்கு செல்ல தயங்கி பலரும் பப்பாளி இலை சாறை அருந்துகின்றனர். எனவே, சுகாதார துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.