/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க மருத்துவர்கள் அறிவுரை
/
கால்நடைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க மருத்துவர்கள் அறிவுரை
கால்நடைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க மருத்துவர்கள் அறிவுரை
கால்நடைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க மருத்துவர்கள் அறிவுரை
ADDED : மார் 15, 2025 06:50 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில் ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் லட்சக்கணக்கில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது.
கால்நடைகளுக்கான கோடைக்கால பராமரிப்பு முறைகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட அரசு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் கூறியதாவது:
கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயர்ச்சியே, உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வெப்பத்தை தாங்காத கால்நடைகள் அடிக்கடி நிழலில் தஞ்சம் புகும். அதிகமாக தண்ணீர் குடிக்கும்.
வேகமாக மூச்சு விடுதல், உடலில் அதிக வெப்பநிலை, வாய் வழியாக சுவாசித்தல், அடிக்கடி கீழே விழுதல் ஆகியவை வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்.
கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைப்பிடித்தால், வெப்ப அயர்ச்சியால் கால்நடைகள் இறப்பதை தடுக்கலாம். தினமும் கால்நடைகளுக்கு நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தொட்டி அமைக்க வேண்டும்.
தண்ணீர் குடிக்கும் போது, கலப்பு தீவனத்தை கலந்தால், மாடுகள் கூடுதலாக தண்ணீர் குடிக்கும். கொட்டகைகளில் உப்பு கட்டிகளை தொங்க விடுவதால், தண்ணீர் அதிகமாக குடிக்க வாய்ப்புள்ளது.
நீர் தெளிப்பான் அமைப்பது, குளிர்ந்த நீரை மாடுகள் மீது தெளிப்பது, மின் விசிறி அமைப்பது ஆகியவை வெப்ப அயர்ச்சியை குறைக்கும். கூரைக்கு மேல்புறத்திலும் நீர் தெளிப்பான் அமைக்கலாம். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்கலாம். மாடுகளுக்கு என, தனியாக குளியல் தொட்டி அமைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.