sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

23 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி! மெதுார் ஏரி துார்வாராமல் மெத்தனம்

/

23 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி! மெதுார் ஏரி துார்வாராமல் மெத்தனம்

23 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி! மெதுார் ஏரி துார்வாராமல் மெத்தனம்

23 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி! மெதுார் ஏரி துார்வாராமல் மெத்தனம்


ADDED : ஆக 16, 2024 11:14 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி : பொன்னேரி அருகே உள்ள மெதுார் ஏரி துார்வாரப்படாமல் வரத்துக்கால்வாய்கள் துார்ந்து போனதால், மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாத நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, 600 ஏக்கர் விவசாயம் பாதித்து வருவதுடன், 23 கிராமங்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், 900 ஏக்கர் பரப்பில் பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் மெதுார், மேலப்பட்டறை, கொள்ளுமேடு, அரசூர், காட்டாவூர், கொக்குமேடு ஆகிய கிராமங்களில், 600 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஏரிக்கு, 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து நீர்வரத்து இருக்கிறது. மேற்கண்ட ஏரி நீரை நம்பி, மேற்கண்ட கிராமங்களில் இருபோகம் விவசாயம் செய்து வந்தனர்.

உவர்ப்பு தன்மை

இந்நிலையில், ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாய்கள் துார்ந்துபோனதாலும், ஏரியில் வண்டல் மண் அதிகரித்து விட்டதாலும், மழைக்காலங்களில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.

இதனால், ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. விவசாய நிலங்களில் இயங்கும் ஆழ்துளை மோட்டார்களிலும் கிடைக்கும் தண்ணீரில் உவர்ப்பு தன்மை அதிகரித்து வருகிறது.

கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், 25மீட்டரில் கிடைத்த நல்ல தண்ணீர் தற்போது, 75மீட்டர் ஆழத்திற்கு போர்வெல் அமைக்க வேண்டிய நிலை இருக்கிறது.

தண்ணீரில் உவர்ப்பு தன்மை அதிகரித்த காரணத்தால் கடந்த, நான்கு ஆண்டுகளாக மேற்கண்ட கிராமங்களில் சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயம் செய்ய முடியாமல் விளைநிலங்கள் தரிசாக போடப்பட்டு உள்ளன.

வடகிழக்கு பருவ மழையை நம்பி, ஆண்டுக்கு ஒரு முறை சம்பா பருவத்தில் விவசாயம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பழவேற்காடு, கோட்டைகுப்பம், தாங்கல் பெரும்புலம் உள்ளிட்ட, ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 23 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக மெதுார் ஏரியின் கரையோரங்களில், 24 ஆழ்துளை மோட்டார்கள் அமைக்கப்பட்டு, தினமும், 16.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.

மேற்கண்ட கிராமங்கள் கடல் பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால், ஆழ்துளை மோட்டார்கள் வாயிலாக கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால் இதை சமைக்க, குளிக்க, குடிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மெதுாரில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் ஆதாரமே இவர்களுக்கு அன்றாட பயன்பாடாக இருக்கிறது.

இடமாற்றம்

இந்நிலையில், ஏரியில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், இதற்காக போடப்படும் ஆழ்துளை மோட்டார்களும் அவ்வப்போது செயல் இழக்கின்றன.

அவை அவ்வப்போது இடமாற்றம் செய்து, புதிய இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. இடமாற்றம் செய்யப்படும் இடங்களிலும், குறுகிய காலத்தில் தண்ணீரில் உவர்ப்பு தன்மை ஏற்படுகிறது.

இதுவரை, 50க்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் உவர்ப்பு தன்மையால் மூடப்பட்டு, புதிய இடங்களில் அவை அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், கிராமங்களில் குடிநீர் வினியோகமும் சீராக இருப்பதில்லை.

மெதுார் ஏரியில் மழைநீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத சூழலில், 600 ஏக்கர் விவசாயமும் பாதித்து, 23 கிராமங்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.

இது குறித்து, விவசாயிகள் தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு

விவசாயி எஸ்.பாஸ்கரன், 60 கூறியதாவது:

பல லட்சம் ரூபாய் செலவில் கரைகளை பலப்படுத்துகின்றனர். கரையின் ஓரங்களில் உள்ள மண்ணை வெட்டி போட்டு, கண்துடைப்பு செய்கின்றனர்.

இதனால் எந்த பயனும் இல்லை. ஏரியில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்க, அதை ஆழப்படுத்த வேண்டும். ஆரணி ஆற்றில் இருந்து வரும் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும். குறுகிய கால்வாய் பாலங்களை விரிவுபடுத்த வேண்டும்.

பொன்னேரி பகுதியிலேயே மிகப்பெரிய ஏரியாக உள்ள மெதுார் ஏரி முழுமையாக துார்வாரி சீரமைப்பதால், விவசாயம் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமும் பாதுகாக்கப்படும். இதே நிலை தொடர்ந்தால், கிராமங்களின் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திட்ட முன்மொழிவு

மெதுார் ஏரி மற்றும் வரத்துக்கால்வாயை துார்வாருவது தொடர்பாக, திட்ட முன்மொழிவு தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். நிதி ஆதாரம் கிடைத்தபின், அதற்கான பணிகள் துவங்கப்படும். ஆக்கிரமிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்வள ஆதாரத்துறை அதிகாரி, பொன்னேரி.






      Dinamalar
      Follow us