/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணிகளால் வியாபாரிகள்... விரக்தி!:நாள் முழுதும் புழுதி பறப்பதால் விற்பனை இன்றி தவிப்பு
/
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணிகளால் வியாபாரிகள்... விரக்தி!:நாள் முழுதும் புழுதி பறப்பதால் விற்பனை இன்றி தவிப்பு
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணிகளால் வியாபாரிகள்... விரக்தி!:நாள் முழுதும் புழுதி பறப்பதால் விற்பனை இன்றி தவிப்பு
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணிகளால் வியாபாரிகள்... விரக்தி!:நாள் முழுதும் புழுதி பறப்பதால் விற்பனை இன்றி தவிப்பு
ADDED : ஜூலை 05, 2024 01:06 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் - வல்லுார் சாலை சீரமைப்பு பணிகள், ஐந்து மாதங்களாக மந்தகதியில் நடைபெறுவதுடன், கொட்டப்பட்ட சரளை கற்களில் இருந்து நாள் முழுதும் புழுதி பறந்து, விற்பனை பொருட்கள் வீணாகி, வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ள வியாபாரிகள் விரக்தியில் இருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் - வல்லுார் இடையேயான, மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும், 20,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.
காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகம், அதானி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பெட்ரோல் மற்றும் எரிவாயு முனையங்கள், நிலக்கரி கிடங்கு, சாம்பல் கிடங்கு ஆகியவற்றிற்கு இவை சென்று வருகின்றன.
நாள்முழுதும் தொடர் போக்குவரத்து உள்ள இச்சாலை குண்டும், குழியுமாக இருந்தது. மழைக்காலங்களில் வாகனங்கள் பெரும் சிரமத்துடன் பயணித்தன.
கடந்த மூன்று ஆண்டுகளாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்த சாலையால், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டனர்.
அதன் பயனாக, இந்த சாலையை சீரமைக்க, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டன. இதற்காக சரளைக் கற்கள் கொட்டி, சாலை மட்டம் உயர்த்தும் பணிகள் நடைபெறுகின்றன.
கடந்த ஐந்து மாதங்களாக சாலை சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
சாலை பணிக்காக கொட்டப்பட்ட சரளைக் கற்களில் இருந்து நாள் முழுதும் புழுதி பறக்கிறது. கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மீது புழுதி படிந்து அவை வீணாகின்றன.
இந்த சாலையில் உள்ள மளிகை, காய்கறி, உணவகங்கள் வைத்திருப்பவர்களின் தொழில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. உணவுப்பொருட்களின் மீது புழுதி படிவதால், வாடிக்கையாளர்கள் யாரும் வாங்குவதில்லை.
மற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கும், இதேநிலை தான் உள்ளது. துாசு படிந்து கிடக்கும் பொருட்களை கையால் எடுத்து பார்ப்பதற்கு வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். விற்பனை இல்லாததால், தற்போது இந்த சாலையில் உள்ள கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன.
சாலையோரங்களில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், ஒவ்வொருவராக வீடுகளை காலி செய்து, வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
நாள் முழுதும் புழுதியில் இருப்பதால், வியாபாரிகள் சுவாசக் கோளாறுகள், உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி தவிக்கின்றனர்.மேலும், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். ஒரு வாரத்தில், 10க்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன.
வியாபாரிகளின் தவிப்பு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. சாலை பணிகளை துரிதமாக முடித்து தரும்படி, நெடுஞ்சாலைத் துறையிடம் முறையிட்டால், அதிகாரிகளிடம் இருந்து அலட்சியமான பதில் கிடைப்பதால், வியாபாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மீஞ்சூர் ரமணா நகர் வியாபாரிகள் சங்க செயலர் ஆர்.மோகன் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக புழுதியை சுவாசித்து வருகிறோம். கடைகளுக்கு வாடிக்கையாளர்களே வருவதில்லை. வருவாய் இழப்புடன், உடல் ஆரோக்கியத்தையும் இழந்து உள்ளோம்.
இரண்டு கி.மீ., சாலை பணிக்கு எத்தனை மாதங்கள் தேவைப்படும். தற்போது, 20 சதவீத பணிகள் கூட முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், ஓராண்டு ஆனாலும், பணிகளை முடிக்க முடியாது.
நெடுஞ்சாலை, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம் ஆகியோரிடம் சரியான ஒருங்கிணைப்பு, திட்டமிடல் இன்றி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மீது நெடுஞ்சாலைத் துறைக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால், அலட்சிய பதிலே கிடைக்கிறது.
இதே சாலையில் சொகுசு கார்களில் பயணிக்கும் அதிகாரிகளுக்கு எங்களின் நிலை தெரிவதில்லை. குறைந்தபட்சம் புழுதியை கட்டுப்படுத்த தண்ணீர் கூட தெளிப்பதில்லை.
மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., என அனைத்து தரப்பிலும் முறையிட்டுவிட்டோம். இனி யாரிடம் முறையிடுவது என தெரியவில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.