/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க சத்துணவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
/
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க சத்துணவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க சத்துணவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க சத்துணவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 21, 2025 03:37 AM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தரமான உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பி.டி.ஓ., அறிவுறுத்தினார்.
திருத்தணி நகராட்சி பெரியார் நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரு நாட்களுக்கு முன் மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவு மஞ்சள் நிறத்தில் இருந்ததால் பெரும்பாலான மாணவர்கள் சாப்பிடாமல், பள்ளி வளாகத்தில் கொட்டினர்.
இது குறித்து, தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவுப்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பஞ்சு மற்றும் திருத்தணி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் சென்று சத்துணவு மையத்தில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கிய உணவை சாப்பிட்டு தரம் பார்த்தனர்.
தொடர்ந்து அங்கு பணிபுரியும், சமையலர், உதவியாளர் ஆகியோரிடம் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.
இதையடுத்து நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், 108 பள்ளிகளின் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு தயாரிக்கும் போது, சமையலர், உதவியாளர்கள் பாதுகாப்பு மற்றும் கவனத்துடன் சமைக்க வேண்டும்.
அதே நேரத்தில் உணவின் தரமும் குறையக் கூடாது. வாரத்தில் ஐந்து நாட்களும் மாணவர்களுக்கு தரமான முட்டைகள் வழங்க வேண்டும். மாணவர்களிடம் இருந்து மதிய உணவு குறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சத்துணவு மையத்தில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயிற்சி வழங்கினர்.

