வடிகால்வாயில் கழிவுநீர் கொட்டிய 5 லாரிகள் உரிமம் ரத்து:எச்சரிக்கையை மதிக்காததால் கலெக்டர் அதிரடி
வடிகால்வாயில் கழிவுநீர் கொட்டிய 5 லாரிகள் உரிமம் ரத்து:எச்சரிக்கையை மதிக்காததால் கலெக்டர் அதிரடி
UPDATED : ஜூலை 29, 2026 07:21 PM
ADDED : ஜூலை 29, 2026 06:51 PM

திருவள்ளூர்:மழைநீர் வடிகால்வாய் மற்றும் பொது இடங்களில் கழிவு நீரை வெளியேற்றிய, ஐந்து லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்தும், கழிவு நீர் லாரி ஓட்டுநர்கள் மதிக்காததால், கலெக்டர் கவிதா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், நீர்நிலைகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை உள்ளடக்கிய மாவட்டம். இம்மாவட்டத்தில், கொசஸ்தலை, ஆரணி மற்றும் கூவம் ஆறுகள் ஓடுகின்றன.
மேலும், ஏரிகள், குளங்களும், அதிகளவில் உள்ளன. மாவட்டத்தில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து சேகரமாகும் கழிவு நீர், லாரிகள் மூலம் அவ்வப்போது அப்புறப்படுத்தப்படுகிறது.
அவ்வாறு கொண்டுவரப்படும் கழிவு நீரை, நீர்நிலைகள், சாலையோரங்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில், லாரி ஓட்டுநர்கள் வெளியேற்றி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கழிவு நீர் லாரிகளின் உரிமையாளர்களிடமும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது.
அப்போது, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவு நீரை அகற்ற வேண்டும். நீர்நிலைகள், பொது இடங்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் கழிவு நீரை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது.
ஆனால், கலெக்டர் எச்சரிக்கையை மதிக்காமல், தொடர்ந்து கழிவு நீர் லாரிகளின் ஓட்டுநர்கள், பொது இடங்களில் கழிவு நீரை வெளியேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, வெள்ளவேடு, மப்பேடு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட சாலையோரங்களில், கழிவு நீர் லாரிகளில் இருந்து, அவ்வப்போது கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, நம் நாளிதழிலும் செய்தி வெளியானதை தொடர்ந்து, சாலையோரம் மற்றும் நீர்நிலைகள், திறந்தவெளிகளில் கழிவு நீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர் கவிதா உத்தரவிட்டார்.
இந்நிலையில், கவரைப்பேட்டை அருகே, திறந்தவெளியில் கழிவு நீர் அகற்றிய லாரியை பிடித்த வருவாய் துறையினர், காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும். சட்ட விரோதமாக மழை நீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டால், லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, கலெக்டர் கவிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் கவிதா கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக கழிவு நீரை அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றின் உரிமமும், ஓட்டுநர்களின் உரிமமும் ரத்து செய்யப்படும் என, பல முறை எச்சரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து, கழிவு நீர் லாரிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் சட்டவிரோதமாக பொதுவெளியில் கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த வாரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பொது கால்வாயில் கழிவு நீரை வெளியேற்றிய ஐந்து லாரிகளை பறிமுதல் செய்ததுடன், அவற்றின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், மற்றொரு லாரி, நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டு, கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களிலும், மழை நீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், லாரியின் உரிமமும், ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
