/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணம் எடுத்து தருவதாக மோசடி செய்தவர் கைது
/
பணம் எடுத்து தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூலை 22, 2025 09:22 PM
பள்ளிப்பட்டு:வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தர உதவுவதாக கூறி, பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன், 48. இவர், கடந்த மாதம் 23ம் தேதி, பள்ளிப்பட்டு இந்தியன் வங்கி கிளையில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அங்கிருந்த நபர், அவருக்கு பணம் எடுத்து தர உதவுவதாக கூறி, கண்ணனின் ஏ.டி.எம்., கார்டை வாங்கியுள்ளார். பின், பணம் இல்லை எனக்கூறி, ஏ.டி.எம்., கார்டை திரும்ப அளித்துள்ளார்.
அன்று மாலை கண்ணனின் வங்கி கணக்கில் இருந்து, 40,000 ரூபாயும், மறுநாள் 38,000 ரூபாயும் எடுக்கப்பட்டதாக, கண்ணனின் மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த கண்ணன், வங்கி கிளையை அணுகினார். விசாரணையில், பணம் எடுக்க உதவுவதாக கூறிய நபர், கண்ணனின் ஏ.டி.எம்., கார்டுக்கு பதிலாக வேறு கார்டை கொடுத்து விட்டு, பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.
பள்ளிப்பட்டு போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு அந்நபரை தேடி வந்தனர். பள்ளிப்பட்டு அடுத்த வெங்கடாபுரம் காலனியைச் சேர்ந்த ஹரி, 27, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, 78,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.