/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூத் ஏஜன்டுகள் நியமிப்பதில் கட்சிகள் இழுபறி
/
பூத் ஏஜன்டுகள் நியமிப்பதில் கட்சிகள் இழுபறி
ADDED : மார் 19, 2024 07:17 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
ஆனால், தேர்தலுக்கான முக்கிய பணிகளில் ஒன்றான பூத் ஏஜன்டுகள் நியமிக்கும் பணிகள் கூட, அரசியல் கட்சியினர் சரிவர செய்யாதது தெரியவந்துள்ளது.
ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தேர்தல் நாளில் பணியாற்ற உள்ள அரசியல் கட்சியினரின் பூத் ஏஜன்டு விபரங்கள், https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொகுதிவாரியாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் எத்தனை பேர் பூத் ஏஜன்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை, தேர்தல் அதிகாரிகள் முழுமையாக பதிவேற்றம் செய்துள்ளனர்.
மொபைல் எண்களுடன் கட்சி பெயர், முகவர் பெயர், ஓட்டுச்சாவடி ஆகிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தி.மு.க., சார்பில், ஒரு பூத் ஏஜன்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., சார்பில் நான்கு சட்டசபை தொகுதியிலும், முழுமையாக தங்கள் கட்சியினர் பூத் ஏஜன்டுகள் நியமித்து, அவற்றை பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க., -- தே.மு.தி.க., - பா.ஜ., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் பூத் ஏஜன்டுகள் பற்றிய விபரங்கள் இடம்பெறவில்லை.
அ.தி.மு.க., சார்பில், பல இடங்களில் பூத் நிலை முகவர்கள் உள்ளனர். ஆனால், முழுமையாக பூத் ஏஜன்டுகள் விபரம் இணையதளத்தில் இல்லை.
காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில், குறைவான எண்ணிக்கையிலேயே பூத் நிலை முகவர்கள் உள்ளனர்.

