/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரத்திற்கு செலவிட்ட நிதி.. ரூ.27 கோடி வீண்:மீண்டும் குவியும் மணல் திட்டுக்களால் மீனவர்கள் அதிர்ச்சி
/
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரத்திற்கு செலவிட்ட நிதி.. ரூ.27 கோடி வீண்:மீண்டும் குவியும் மணல் திட்டுக்களால் மீனவர்கள் அதிர்ச்சி
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரத்திற்கு செலவிட்ட நிதி.. ரூ.27 கோடி வீண்:மீண்டும் குவியும் மணல் திட்டுக்களால் மீனவர்கள் அதிர்ச்சி
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரத்திற்கு செலவிட்ட நிதி.. ரூ.27 கோடி வீண்:மீண்டும் குவியும் மணல் திட்டுக்களால் மீனவர்கள் அதிர்ச்சி
ADDED : செப் 29, 2025 01:33 AM

பழவேற்காடு:பழவேற்காடில், ஏரியும், கடலும் இணையும் பகுதியில், 26.85 கோடி ரூபாயில் கருங்கற்களை கொண்டு, நிரந்தர முகத்துவாரம் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் மணல் திட்டுக்கள் உருவாகி இருப்பதால், அதற்காக செலவிட்ட நிதி பயனற்று போனதாக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலும் ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதி வழியாக, 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
மீனவர்கள் கடலுக்கு சென்று வருவதற்கான நுழைவு வாயிலாக இருக்கும் அப்பகுதியில், கடல்நீர் ஏரிக்கு வந்து செல்லும்போது, அத்துடன் மணலும் அடித்து வரபட்டு மணல் திட்டுக்கள் ஏற்படும். இதனால் மீனவர்கள் மணல் திட்டுக்களில் சிக்கி படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் தவிப்பர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்திற்கு முன், மீன்வளத்துறை மீனவர்களுடன் இணைந்து, முகத்துவாரத்தை தற்காலிமாக துார்வாரும் பணிகளை மேற் கொள்ளும். அடுத்து வரும் நாட்களில் மீண்டும் முகத்துவாரம் மணல் திட்டுக்கள் அடைந்து விடும்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்ததால், இங்கு நிரந்தர முகத்துவாரம் அமைத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் பயனாக, கடந்த, 2019ல், நிரந்தர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 26.85 கோடி ரூபாய் ஒதுக்கியது.
பல்வேறு துறைகளின் அனுமதி பெறுவதில் இழுபறி நீடித்து, பின், 2023 ஜனவரியில், பணிகள் துவங்கப்பட்டன.
இருபுறமும் அலை தடுப்புசுவர் அமைப்பதற்கு பாறை கற்கள் கொண்டு வரப்பட்டு, அவை பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் அடுக்கி வைக்கப்பட்டன.
இந்த அலை தடுப்பு சுவரானது, கடல் மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில், 160 மீ. நீளம், தெற்கு பகுதியில் 150 மீ. நீளம் மற்றும், 4.5 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டது.
மேலும், அலை தடுப்பு சுவர்களுக்கு இடையே உள்ள பகுதியில், 280மீ. அகலம், 3 மீ. ஆழத்தில், டிரஜ்ஜர் இயந்திரங்கள் உதவியுடன் மணல் திட்டுக்கள் வெளியேற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிரந்தர முகத்துவாரத்திற்கான அலைதடுப்பு சுவர் அமைப்பது, மணல் திட்டுக்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் கடந்த, ஜூலை இறுதியில் முடிந்தது.
அதேசமயம், மேற்கண்ட நிரந்தர முகத்துவார பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என, மீனவர்கள் அதிருப்தி யுடன் தெரிவிக்கின்றனர்.
அலைதடுப்பு சுவர்களுக்கு இடையே மணல் திட்டுக்கள் குவிந்து, பழைய நிலை தொடர்கிறது. மீனவர்கள் அதன் வழியாக கடலுக்குள் செல்ல முடியாமல், இயற்கையாக இருக்கும் மற்றொரு முகத்துவாரம் வழியாக கடலுக்குள் சென்று வருகின்றனர்.
நீண்ட கால கோரிக்கையால் அமைந்த முகத்து வாரம் மீனவர்களுக்கு பயனின்றி கிடப்பதாகவும், அதற்காக செலவிட்ட, 26.85 கோடி ரூபாய் வீணாகி உள்ளதாகவும் மீனவர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் ஆரணி மற்றும் பகிங்ஹாம் கால்வாய் வழியாக பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியை அடையும்.
அங்கிருந்து இந்த முகத்துவாரம் வழியாக கடலுக்கு சேர வேண்டும். முகத்துவாரம் அடைபடுவதால், மழைநீர் கடலுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பொன்னேரி, பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புகளை சந்திக்கும்.
முகத்துவாரத்தில் மணல் திட்டுக்கள் குவிந்து கிடப்பதால், வடகிழக்கு பருவ மழையின்போது, பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழலும் உள்ளது.
பயன் தராத திட்டம் மணல் திட்டுக்கள் அரைகுறையாக அகற்றப்பட்டன. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இந்த முகத்துவாரம் மீனவ மக்களுக்கு பயனில்லாத திட்டமாக மாறி உள்ளது. தற்போதைய நிலையில், ஏற்கனவே இயற்கையாக இருக்கும் முகத்துவாரம் வழியாகவே தொழிலுக்கு சென்று வருகிறோம். வடகிழக்கு பருவ மழை அதிகரிக்கும் முன், முகத்துவாரத்தில் குவிந்துள்ள மணல் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு நிரந்தரமாக டிரஜ்ஜர் இயந்திரம் பொருத்தி, கடலில் அடித்து வரப்பட்டு குவியும் மணல் திட்டுக்களை அவ்வப்போது அகற்றினால் மட்டும் பயனுள்ளதாக இருக்கும். - டி.நித்யானந்தம், மீனவர், பழவேற்காடு.