/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் கண்ணாடிகளை நொறுக்கும் மாணவர்களால்... அச்சம்! ஊத்துக்கோட்டை பணிமனை ஓட்டுநர்கள் தவிப்பு
/
பஸ் கண்ணாடிகளை நொறுக்கும் மாணவர்களால்... அச்சம்! ஊத்துக்கோட்டை பணிமனை ஓட்டுநர்கள் தவிப்பு
பஸ் கண்ணாடிகளை நொறுக்கும் மாணவர்களால்... அச்சம்! ஊத்துக்கோட்டை பணிமனை ஓட்டுநர்கள் தவிப்பு
பஸ் கண்ணாடிகளை நொறுக்கும் மாணவர்களால்... அச்சம்! ஊத்துக்கோட்டை பணிமனை ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : பிப் 04, 2025 01:06 AM
ஊத்துக்கோட்டை, பிப். 4- அரசு பேருந்துகளின் ஒயர்களை அறுத்தல், மின்விளக்கு, முகப்பு கண்ணாடிகளை உடைக்கும் பள்ளி மாணவர்களின் செயலால், ஊத்துக்கோட்டை - செங்குன்றம் மார்க்கத்தில் பணிபுரிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து, கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி, சத்தியவேடு, காளஹஸ்தி, நெல்லுார் உள்ளிட்ட இடங்களுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், ஐந்து பேருந்துகள் ஊத்துக்கோட்டை - செங்குன்றம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.
ஊர் சுற்றல்
இதுதவிர, பாடியநல்லுார் மாநகர பேருந்து பணிமனையில் இருந்து, இந்த மார்க்கத்தில், ஆறு பேருந்துகளை இயக்குகிறது.
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர் தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், சூளைமேனி, தண்டலம், ஆத்துப்பாக்கம், பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, கல்வி பயில அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்கின்றனர்.
மாணவர்கள் மாலை நேரங்களில் பள்ளி நேரம் முடிந்தவுடன், பேருந்து நிலையம் செல்லும் அவர்கள், பேருந்து இருந்தாலும் அதில் ஏறி வீட்டிற்கு செல்லாமல் சுற்றுகின்றனர்.
சில மாணவர்கள் நிற்கும் பேருந்துகளில் உள்ள ஒயர்கள், மின்விளக்குகள் ஆகியவற்றை சேதப்படுத்துகின்றனர். பேருந்து நிலையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் இருந்தாலும், மாணவர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணிக்கின்றனர்.
சில மாணவர்கள் பேருந்து நிலையத்தில் ஏறி, பேரூராட்சி அலுவலகம் அருகே இறங்கி, மீண்டும் பேருந்து நிலையம் சென்று, மற்றொரு பேருந்தில் படிக்கட்டு பயணம் மேற்கொள்கின்றனர். ஓட்டுநர், நடத்துநர், பஸ்சுக்குள் உள்ளே வாருங்கள் எனக் கூறினால், அவர்களை கிண்டல் செய்கின்றனர்.
5 பேருந்து சேதம்
சூளைமேனி, பெரம்பூர், பாலவாக்கம், பேரண்டூர் ஆகிய பகுதிகளில், பேருந்துகள் நின்று மாணவர்களை இறக்கிய பின், கற்கள் வீசி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைக்கின்றனர். இதுவரை, விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் 4, மாநகர பேருந்து ஒன்று என, ஐந்து பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இரு தினங்களுக்கு முன், கண்ணாடி உடைத்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் இதற்கான இழப்பீடு வழங்க வேண்டி உள்ளது.
இதனால் ஊத்துக்கோட்டை - செங்குன்றம் மார்க்கத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிபுரிய அச்சம் அடைந்துள்ளனர்.
அரசு பஸ்களில் பள்ளி மாணவர்கள் பயணிக்க, இலவசம் என அறிவித்தது. இவர்களுக்கு, பாஸ் வழங்கவில்லை. பள்ளி சீருடையில் வரும் மாணவ - மாணவியரை ஏற்றிச் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளது. இதை, சில மாணவர்கள் தவறாக பயன்படுத்தி, அடிக்கடி பேருந்தில் பயணம் செய்கின்றனர். இதை தட்டிக் கேட்டால், பேருந்தில் உள்ள மின்ஒயர், மின்விளக்கு, முகப்பு கண்ணாடிகளை உடைக்கின்றனர். இதற்கு நாங்கள் இழப்பீடு வழங்க வேண்டி உள்ளது. இதனால், ஊத்துக்கோட்டை - செங்குன்றம் மார்க்கத்தில் பணியாற்ற அச்சமாக உள்ளது.
-நடத்துனர்கள், ஓட்டுனர்கள், அரசு பேருந்து பணிமனை, ஊத்துக்கோட்டை.

