/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி... மந்தம்!: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் ஆமை வேகம்
/
29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி... மந்தம்!: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் ஆமை வேகம்
29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி... மந்தம்!: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் ஆமை வேகம்
29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி... மந்தம்!: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் ஆமை வேகம்
ADDED : மே 18, 2024 12:43 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்க கரையை ஒட்டி, 5 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், உரிய காலத்தில் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டம், பூண்டியில் கடந்த 1944ம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்காக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 65 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, ஆற்றின் கரையை ஒட்டியிருந்த, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலி செய்யப்பட்டன.
நீர்த்தேக்கத்திற்கு நடுவில் இருந்த, வரலாற்று சிறப்பு மிக்க, ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு கரையோரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வற்றும் போது, இன்றும், பழைய கோவிலை காணலாம்.
இந்த நீர்த்தேக்கம், பூண்டி, சென்றாயன்பாளையம், மேட்டுப்பாளையம், பாண்டூர், பட்டரைபெரும்புதுார் என, 121 ச.கி.மீட்டர் துாரம் பரந்து, விரிந்து காணப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்தேக்கம் நடுவில், உபரி நீர் வெளியேற, 16 மதகுகள் உள்ளன.
பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், நீர்த்தேக்கம் நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரு கால்வாய் வாயிலாக, சோழவரம், புழல் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பூண்டி நீர்த்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணி துறை - நீர்வள ஆதாரம், அலுவலகம், அருகிலேயே உள்ளது. உயர் அதிகாரிகள் தங்குவதற்காக, இங்கு, விருந்தினர் மாளிகையும் உள்ளது.
பூண்டி மற்றும் சதுரங்கபேட்டை கிராமம் அருகில் நீர்த்தேக்க கரையோரத்திலும், அழகிய பூங்கா அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பூங்காக்கள் அனைத்தும் சிதிலமடைந்து விட்டன.
ஒவ்வொரு ஆண்டும், காணும் பொங்கல் மற்றும் விடுமுறை தினங்களில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, பொதுமக்கள், குழந்தைகளுடன் நீர்த்தேக்கத்திற்கு வந்து, பார்வையிட்டு, இளைப்பாறி சென்று வருகின்றனர்.
கடந்த, ஆறு ஆண்டுக்கு முன், பூண்டியில் சுற்றுலா தலமாக மாற்ற அப்போதைய அ.தி.மு.க., அரசு, 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், பணி நடைபெறவில்லை.
இந்நிலையில், மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த, 'எக்கோ பார்க்' எனப்படும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, பூண்டி ஏரிக்கரையை ஒட்டி இருக்கும், சதுரங்கப்பேட்டை நிலம் தேர்வு செய்யப்பட்டது. அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான மா, புளி, பனை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து அடர்த்தியாக இருந்தன. இந்த இடத்தில், 29 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, தனியார் தொண்டு நிறுவனத்திற்கு, அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக, அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், பூங்கா அமைக்கவும், அரசு தரப்பில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த, அக்., 5ல் அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடந்தது. கைத்தறித் துறை அமைச்சர் காந்தி பூங்கா கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:
அரசு சார்பில் 3 கோடியும், தனியார் நிறுவனங்களின், சமுதாய பங்களிப்பு திட்டத்தில் 2 கோடி என, 5 கோடி ரூபாய் மதிப்பில் 'சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
இங்கு, சுற்றுலாவாசிகளுக்கான உணவகம், குழந்தைகள் விளையாடும் பகுதி, சைக்கிள் நடைபாதை உள்ளிட்ட இயற்கை சூழ்ந்த வசதி இடம்பெறும்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகும் விளங்கும், பூண்டி நீர்த்தேக்கத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், படகு வசதி ஏற்படுத்தவும் பரிசீலனை நடந்து வருகிறது. மேலும், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் சுற்றிலுமுள்ள பழைய பூங்காக்களையும் பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்குள் இப்பணி முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், பணி துவங்கி, எட்டு மாதங்களாகியும், தற்போது உணவகத்திற்கான கட்டுமான பணி மட்டும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பூங்கா அமைவதற்கான எவ்வித பணியும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் திட்டமிட்ட காலத்திற்குள் சுற்றுச்சூழல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, சுற்றுச்சூழல் பூங்கா பணியினை விரைந்து முடிக்க முனைப்பு காட்ட வேண்டும் என, சுற்றுலாவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

