/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகம் சேதம்
/
திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகம் சேதம்
ADDED : ஜன 24, 2025 01:16 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் 28 என, மொத்தம் 29 கோவில்களை முருகன் கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த கோவில்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் வரவு - செலவு கணக்குகள் சரி பார்ப்பதற்கு, திருத்தணி தணிகை இல்லம் வளாகத்தில், முருகன் கோவிலின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, இணை ஆணையர், உதவி ஆணையர், மேலாளர்கள், பொறியியல் பிரிவு மற்றும் அலுவலக ஊழியர்கள் என, 60க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட கட்டடம், 25 ஆண்டுகளுக்கு முன், கட்டடம் கட்டி அலுவலக பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தலைமை அலுவலக கட்டடம் முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டடத்தின் தளம் ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்துள்ளன. குறிப்பாக அலுவலகத்தின் தளத்தில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து அடிக்கடி விழுவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் வேலை செய்து வருகின்றனர்.
எனவே, கோவில் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தலைமை அலுவலக கட்டடம் தரமாகதான் உள்ளது. சேதமடைந்த இடத்தை விரைவில் சீரமைக்கப்படும்' என்றார்.