/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் திருவாலங்காடு துணை மின் நிலைய திட்டப் பணி 50 கிராமத்தினர் அதிருப்தி
/
கிடப்பில் திருவாலங்காடு துணை மின் நிலைய திட்டப் பணி 50 கிராமத்தினர் அதிருப்தி
கிடப்பில் திருவாலங்காடு துணை மின் நிலைய திட்டப் பணி 50 கிராமத்தினர் அதிருப்தி
கிடப்பில் திருவாலங்காடு துணை மின் நிலைய திட்டப் பணி 50 கிராமத்தினர் அதிருப்தி
ADDED : பிப் 17, 2025 02:45 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்த பழையனுாரில், துணை மின் நிலையம் அமைக்க மின்துறை ஒப்புதல் வழங்கி, மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு 1.64 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குறைந்தளவு மின்சாரம் மட்டுமே கிடைப்பதால், 50 கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள 30 கிராமங்களுக்கு, கடம்பத்துார் மற்றும் மோசூர் துணை மின் நிலையம் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மணவூர், தொழுதாவூர், குப்பம் கண்டிகை உட்பட 24 கிராமங்களுக்கு கடம்பத்துாரில் இருந்தும், சின்னம்மாபேட்டை வியாசபுரம், அரிசந்திராபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு மோசூர் துணை மின் நிலையத்தில் இருந்தும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட இரண்டு துணை மின் நிலையத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு மின்சாரம் கிடைப்பதால், 140 ----- 190 வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் பல வீடுகளில் மின்விசிறி கூட சரியாக இயங்காத சூழல் இருந்து வருகிறது.
கடந்த, 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் மின்சாரம் தட்டுப்பாடு பிரச்னை உள்ளதால், திருவாலங்காடு பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, 2020ம் ஆண்டு, திருவாலங்காடு மின்துறை அதிகாரியால், அரசுக்கு முன்மொழிவு அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2021ம் ஆண்டு மின்துறை துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியது.
அதன்படி பழையனுாரில், 14 கோடியே, 73 லட்சத்து, 63,000 ரூபாய் மதிப்பில், 1.64 ஏக்கர் பரப்பளவில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த துணை மின் நிலையம் 20 மெகா வோல்ட் திறன் உடையது. எனவே 50 கிராமங்களுக்கு மின்சாரம் முழு சப்ளை கிடைக்கும் எனவும், இதில் 200 மின்மாற்றிகள் வரை அமைத்து முழு மின்சாரம் பெறப்படும்.
இந்நிலையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி, நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'துணை மின் நிலையம் அமைக்க உபகரணங்கள் வர தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவாக அனுப்ப வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வரும் ஏப்ரலில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி துவங்கும். ஆறு மாதங்களில் முடித்து துணை மின் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.