/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது
/
10 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது
ADDED : ஜூலை 12, 2025 09:33 PM
திருத்தணி:திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக வந்த அரசு பேருந்தில், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், பொன்பாடி சோதனைச்சாவடியில் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்து வந்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசு பேருந்தை சோதனை செய்தனர்.
பேருந்தில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் மற்றும் அவர் அருகில் இருந்த ஒருவரின் உடைமைகளை சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சிவாயன், 45, கைக்குழந்தை வைத்திருந்த பெண் ரத்தினம், 32, என தெரிந்தது.
இவர்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும், போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, கைக்குழந்தையுடன் ரத்தினம் வந்ததாக கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.