ADDED : ஜன 19, 2025 08:30 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் இருந்து அகூர் கிராமத்தில் ஆண்டு தோறும் உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில் நடப்பாண்டில் வரும், 24ம் தேதி உற்சவர் முருகர் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக மேல்திருத்தணி நல்லாங்குளம் வந்தடைவார். பின் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி மூலம் மேல்திருத்தணி, முருகூர், குமாரகுப்பம் வழியாக அகூர் கிராமத்திற்கு சென்றடைவார்.
மாலை, 6:00 மணிக்கு அங்குள்ள அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெறும். அங்கிருந்து உற்சவர் முருகர் சிறப்பு அலங்காரத்தில் அகூர் கிராமம் முழுதும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு, 11:00 மணிக்கு அகூரில் இருந்து மீண்டும் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தடைவார்.