/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் வரும் 18 முதல் அக்.,15 வரை நடக்கிறது
/
கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் வரும் 18 முதல் அக்.,15 வரை நடக்கிறது
கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் வரும் 18 முதல் அக்.,15 வரை நடக்கிறது
கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் வரும் 18 முதல் அக்.,15 வரை நடக்கிறது
ADDED : செப் 15, 2024 11:40 PM
உடுமலை : கால்நடைத்துறை சார்பில், கறவை மாடுகளில் 'புரூசெல்லோசிஸ்' எனப்படும் கருச்சிதைவு நோய்க்கான தடுப்பூசி முகாம், வரும் 18ம் தேதி முதல், அக்.,15 வரை நடக்கிறது.
புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது 'புரூசெல்லா அபார்டஸ்' என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும், 4 மாதம் முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில், கருச்சிதைவும் ஏற்படுகிறது.
மேலும், இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.
இந்நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில், மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும்.
தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் வாயிலாக, 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக்கொண்டால், அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும்.
மேலும் காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக்கூடாது.
கால்நடை நிலையங்கள் வாயிலாக, வரும் 18ம் தேதி முதல், அக்., 15 வரை, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.