/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்; மாணவர்களுக்கு அறிவுரை
/
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்; மாணவர்களுக்கு அறிவுரை
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்; மாணவர்களுக்கு அறிவுரை
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்; மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 11, 2024 10:24 PM

உடுமலை : ''குழந்தைகள் அனைவரும் சமூகத்தில் தங்களை சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்; பிரச்னைகள் ஏற்பட்டால் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு அழைக்க வேண்டும்,'' என சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேசினார்.
மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகளின் பாதுகாப்பு, போக்சோ சட்டம் மற்றும் அடிப்படைச்சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
குழந்தைகள் அனைவரும், சமூகத்தில் தங்களைச்சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.புகையிலை போன்ற போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட வேண்டாம்.
18 வயது பூர்த்தி அடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்கக்கூடாது. குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் நடைபெறுவது தெரிய வந்தாலோ, வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ உடனடியாக, '1098' என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து நடப்பதோடு, நன்கு படித்து நற்பெயர் பெற வேண்டும்.
விளையாட்டு, ஓவியம், நடனம், தற்காப்பு போன்ற கூடுதல் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை தவிர வேறு யாரும் உங்களின் நலன் மீது அக்கறை செலுத்த முடியாது.
இவ்வாறு, பேசினார்.
இதில், பள்ளி உதவி தலைமை ஆசிரியை நாகவேணி, ஆசிரியர்கள் சம்பத் குமார், குலாம் தஸ்தகீர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

