/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய சங்கத் தலைவர் பழனிசாமிக்கு இன்று மணிமண்டபம் திறப்பு விழா
/
விவசாய சங்கத் தலைவர் பழனிசாமிக்கு இன்று மணிமண்டபம் திறப்பு விழா
விவசாய சங்கத் தலைவர் பழனிசாமிக்கு இன்று மணிமண்டபம் திறப்பு விழா
விவசாய சங்கத் தலைவர் பழனிசாமிக்கு இன்று மணிமண்டபம் திறப்பு விழா
ADDED : ஆக 18, 2024 12:23 AM

பல்லடம்:விவசாயிகளின் போராளி எனப்படும், முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ். பழனிசாமியின் மணிமண்டபத் திறப்பு விழா, பல்லடம் அருகே இன்று நடக்கிறது.
பல்லடம் தாலுகா, கள்ளிப்பாளையம் ஊராட்சி, நாதகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.எஸ்.பழனிசாமி. பட்டப்படிப்பு முடித்து, கல்லுாரி பேராசிரியராக இருந்த இவர், தனது பணியை துறந்து, விவசாய தொழிலில் களம் இறங்கினார்.
விவசாயிகளின் போராளி என்று அழைக்கப்படும் இவரது வாழ்க்கை பயணம் குறித்து அவரது மகனும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவருமான வெற்றி கூறியதாவது:
முன்னாள் விவசாய சங்க தலைவர் நாராயணசாமி காலத்தில், பச்சை துண்டு அணிந்து விவசாயிகள் பிரச்னைக்காக களமிறங்கினார். இவரது செயல்பாடு, போராட்ட குணம், மேடைப்பேச்சு, ஆங்கில புலமை, அரசு அதிகாரிகளை கையாண்ட விதம் ஆகியவை விவசாயிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டன.
கிராமத்தில் இருந்து கொண்டு, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல், மாநாடு என, அதிரடியாக செயல்பட்டு, கோவை மாவட்ட தலைவரானார். 1970 -- 72 காலகட்டத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில், 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்தே, ஜூலை 5ம் தேதியை உழவர் தினமாக நாராயணசாமி நாயுடு அறிவித்தார்.
உயிரிழந்த விவசாயிகளின் நினைவாக, என்.எஸ்.பழனிசாமி தலைமையில் கொட்டும் மழையிலும் நடந்த பேரணி கொங்கு மண்டலத்தையே உலுக்கியது. கடந்த, 1991ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்த முதல் விவசாய சங்க பிரதிநிதி என்ற பெருமை பெற்றார்.
இவர் காலகட்டத்தில்தான், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற ஒரு விவசாய சங்க போராளி வாழ்ந்து மறைந்தது குறித்து, எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
---
பல்லடம் அடுத்த நாதகவுண்டம்பாளையத்தில் இன்று திறக்கப்படவுள்ள விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமி மணி மண்டபம், வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள என்.எஸ்.பழனிசாமி சிலை
என்.எஸ்.பழனிசாமி

