தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பி.ஏ.பி., பிரதான கால்வாயை முழுமையாக... சீரமைப்பு எப்போது?

பி.ஏ.பி., பிரதான கால்வாயை முழுமையாக... சீரமைப்பு எப்போது?

பி.ஏ.பி., பிரதான கால்வாயை முழுமையாக... சீரமைப்பு எப்போது?


ADDED : மே 09, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2024 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை : இரு மாவட்ட பாசன ஆதாரமான பி.ஏ.பி., பிரதான கால்வாய், படுமோசமாக உள்ள பகுதிகளில் மட்டுமாவது, நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைப்பு பணிகளை துவக்கி, நீர் நிர்வாக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., பாசனத்திட்டத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பிரதான கால்வாயில், தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

கோவை, திருப்பூர் மாவட்ட பாசன ஆதாரமாக உள்ள இக்கால்வாய் அணையிலிருந்து, 125 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது. நீண்ட காலமாக கால்வாய் புதுப்பிக்கப்படாமல், பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.

குறிப்பாக, உடுமலை பகுதியில், அணை அருகிலும், பாப்பனுாத்து உள்ளிட்ட இடங்களிலும், கால்வாய் மிக மோசமாக உள்ளது. கரையில் மரங்கள் முளைத்து, முற்றிலுமாக சிதைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், கால்வாய் உடைப்பு தொடர்கதையாக உள்ளது. ஒரு முறை உடைப்பு ஏற்பட்டால், அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு, சீரமைக்க இரு நாட்களுக்கு மேலாகிறது.

அப்போது, பாசன நீரை நம்பி சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி பாதிக்கின்றன. இதே போல், மண்டல பாசன சுற்றுகளிலும், நாட்கள் குறைக்கப்பட்டு, நிலைப்பயிர்கள் பாதிக்கின்றன.

பிரதான கால்வாய் சில இடங்களில், கான்கிரீட் பூச்சு முற்றிலுமாக, சிதைந்து உள்ளே இருந்த கற்கள் வெளியே வந்து, கரை சரியும் நிலையில் இருப்பதும் பிரச்னைக்கு காரணமாகிறது. மண்டல பாசனத்துக்கு முன், அவசர கதியில், பராமரிப்பு செய்தாலும், களிமண் பகுதியாக இருப்பதால், மீண்டும் கரை வலுவிழந்து விடுகிறது. இதனால், முழு கொள்ளளவில், பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு, நீர் நிர்வாகத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

கடைமடை பகுதி மட்டுமல்லாது, உடுமலை பகுதியிலுள்ள கிளை கால்வாய்களிலும், நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, பிரதான கால்வாய் படுமோசமாக உள்ள பகுதிகளில், உடனடியாக சீரமைப்பு பணிகளை துவக்க வேண்டும்.

விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., மண்டல பாசனத்தில், பல்வேறு காரணங்களால், சுற்றுகள் குறைக்கப்பட்டு, சாகுபடிகள் பாதிக்கிறது. இதற்கு பிரதான கால்வாய் தற்போதுள்ள நிலையும் ஒரு காரணமாகும்.

'மிக மோசமாக உள்ள பகுதிகளில், 'ஜியோ -சின்தட்டிக்' நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கால்வாய் உறுதித்தன்மையை பாதுகாக்கலாம்,' என பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பல ஆண்டுகளாகியும் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது மண்டல பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அடுத்த மண்டல பாசனத்துக்கும், அதிக இடைவெளி உள்ளது. எனவே, கால்வாய் படுமோசமாக உள்ள பகுதிகளில், சீரமைப்பு செய்ய தமிழக அரசு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

நிலத்தடி நீர்மட்டம் சரிவு


உடுமலை பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் சீராக இருக்க பி.ஏ.பி., பாசனம் உறுதுணையாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு சுற்றுகள் தண்ணீர் கிடைத்ததால், அனைத்து நீராதாரங்களுக்கும் நீர் வரத்து கிடைத்தது.

கடந்த, நான்காம் மற்றும் முதலாம் மண்டல பாசனத்தில், சுற்றுகள் மற்றும் பாசன நாட்கள் குறைக்கப்பட்டது. மழையும் பெய்யாமல், பாசன நீரும் பற்றாக்குறையாகவே கிடைத்ததால், நிலத்தடி நீர் மட்டமும் சரிந்து பல ஆயிரம் ஏக்கர நிலங்கள் தரிசாக மாறி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us