/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணையிலிருந்து பிரதான கால்வாயில் நீர் திறப்பு 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
/
அணையிலிருந்து பிரதான கால்வாயில் நீர் திறப்பு 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அணையிலிருந்து பிரதான கால்வாயில் நீர் திறப்பு 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அணையிலிருந்து பிரதான கால்வாயில் நீர் திறப்பு 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
ADDED : ஜூன் 20, 2025 11:41 PM

உடுமலை : உடுமலை அமராவதி அணையிலிருந்து, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு பிரதான கால்வாயில் நேற்று முதல், 15 நாட்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த, 7ம் தேதி முதல், அக்., 20 வரை, பழைய ஆயக்கட்டு பாசனம், எட்டு ராஜ வாய்க்கால்களுக்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
அணை நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால், புதிய ஆயக்கட்டு பாசனம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, தென்னை, வாழை, கரும்பு, காய்கறி பயிர்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த, 16ம் தேதி அணை நிரம்பி, பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், நேற்று முதல், வரும், ஜூலை, 5 வரை, 15 நாட்களுக்கு அணையிலிருந்து, பிரதான கால்வாயில், வினாடிக்கு, 440 கனஅடி வீதம், 570.24 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் அரசு உத்தரவு அடிப்படையில் நீர் திறக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
அணை நிலவரம்
அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 88.46 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில், 3,907.59 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, 1,792 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது. அணையிலிருந்து, வினாடிக்கு, ஆற்றில், 1,331 கனஅடி நீரும், பிரதான கால்வாயில், 440 கனஅடி நீர் என மொத்தம், 1,771 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.