/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகேட்பு முகாமில் குவிந்த 319 மனுக்கள்
/
குறைகேட்பு முகாமில் குவிந்த 319 மனுக்கள்
ADDED : ஆக 11, 2025 11:45 PM
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அம்மனுக்கள், நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அரசு அலுவலர்கள் வசம் சேர்க்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு:
திருப்பூர் மாநகராட்சி, 57வது வார்டு பகுதியில், காளி குமாரசாமி கோவில் முதல் வள்ளலார் நகர் வரை ரோட்டின் இருபுறமும் தனியார் ஆக்கிரமித்து, தகர ஷெட் அமைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றி, போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். குண் டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க, 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இதற்கான பூமி பூஜையும் கடந்த ஜூன் மாதம் நடந்தது. ஆனால் இன்னும் ரோடு பணிகளை துவக்கவில்லை. சாலையை அளந்து, விரிவாக்கம் செய்ய வேண்டும்; புதிய ரோடு போட வேண்டும்.
திருக்குமரன் நகர், அமராவதி நகர், காளிகுமரன் நகர் பகுதிகளில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ரிங் தொட்டிகளில் தேக்கப்படுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதிகளில், சாக்கடை கால்வாய் வசதி செய்துதரவேண்டும்.
மூகாம்பிகை நகர் பகுதி யில் செயல்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், போதிய மருந்துகள் இருப்பு இல்லை. கதவுகள் இல்லாததால், சமூக விரோதிகள் இரவு நேரங்களில் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர். சுற்றுச்சுவர் பூச்சு வேலைகளை விரைந்து முடித்து, 'கேட்' பொருத்த வேண்டும்; அனைத்து மருந்துகளும் கிடைக்கச் செய்யவேண்டும்.
சமூக ஆர்வலர் சரவணன்:
கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மனு அளிக்க வரும் பொதுமக்களில் பெரும்பாலானோர், படிப்பறிவு இல்லாதவர்கள்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமானோர், மனு எழுதி கொடுப்பதற்காக அமர்ந்திருக்கின்றனர். இவர்கள், மனு எழுதுவதற்காக, மனுவுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதனால், ஏழை மக்கள் மனு அளிக்க, பணம் செலவிடவேண்டியுள்ளது.
சிலர், தங்கள் லெட்டர் பேடில் மனு எழுதி கொடுத்து, அரசு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படாமல் தடுக்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் ஏழை மக்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி மனு எழுதி கொடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய குறை கேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 319 மனுக்கள் பதிவு செய்யப்பட்டன.
மதியமே வெறிச்சோடியது
கலெக்டர் அலுவலகம்
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி, உடுமலையில் நேற்று நடந்தது. கலெக்டர் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் உடுமலை சென்று விட்டனர். இதனால், நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆகிய இருவர் மட்டுமே, மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர். அதேபோல், கூட்ட அரங்கிலும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. வழக்கமாக, காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை மனு அளிக்க மக்கள் கூட்டம் அதிகரித்து, பரபரப்பாக காணப்படும். ஆனால், மக்கள் வருகை குறைவால், நேற்று, மதியம், 12:30 மணி முதலே கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடியது.