/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேர மேலாண்மையில் அசத்தும் அரசு பஸ் டிரைவர்
/
நேர மேலாண்மையில் அசத்தும் அரசு பஸ் டிரைவர்
ADDED : டிச 01, 2024 01:08 AM

அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டலம், பல்லடம் கிளையில் பணியாற்றி வருபவர், செல்வன். 'பி 8' என்ற அரசு டவுன் பஸ் டிரைவர். கடந்த வாரம் இவருக்கு பல்லடம் கிளையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல பொதுமேலாளர் சிவக்குமார், உதவி மேலாளர் ஜோதிமணிகண்டன், பல்லடம் கிளை மேலாளர் செந்தில்குமார், போக்குவரத்து கழக அதிகாரிகள், சக ஊழியர்கள் பங்கேற்று, பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
பாராட்டு கிடைத்தது எப்படி?
ஒரு டிரைவருக்கு போக்குவரத்து கழக அதிகாரிகளே பாராட்டு நடத்த வேண்டியது ஏன் என விசாரித்த போது,' பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இவர், நேரம் தவறாமையை சரியாக கடைபிடிக்கிறார். பணி நேரத்துக்கு முன்பாக பஸ் இயக்கத்துக்கு வந்து விடுகிறார். பஸ் இயக்கத்தில் சரியாக நேர மேலாண்மை கடைபிடித்துள்ளார். ஒரு நாள் தவறாமல் சரியான நேரத்துக்கு பஸ் இயக்கியுள்ளார். இவர் பஸ் இயக்கும் பல்லடம் - மலுமிச்சம்பட்டி (வழி: செட்டிபாளையம்) இடையே வழக்கமாக பயணித்து வரும் பயணிகள், கூறிய, சமூகவலைதளங்களில் பதிவிட்ட தகவல்களை சேகரித்த, போக்குவரத்து கழக அதிகாரிகள், நேரம் தவறாமை பின்பற்றியதற்காக, பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக பயணிக்கும் பயணிகள் தகவல் தெரிவித்ததுடன். நேர மேலாண்மையை நிரூபிக்க போட்டோ, வீடியோக்களை பொது மேலாளருக்கு அனுப்பியுள்ளனர். கிளை மேலாளர் உள்ளிட்ட அலுவலர் மூலம் டிரைவர் செயல்பாடு, நடத்தை பற்றி விசாரித்த பின், நிலவரம் அறிந்து, கவுரவப்படுத்தியுள்ளனர்.
தனக்கு பாராட்டு வந்தது குறித்து டிரைவர் செல்வன் இப்படி கூறுகிறார்...
1992 ல் பஸ் ஓட்ட வந்தேன்; 2012 ல் கன்பார்ம் ஸ்டாப் ஆனேன். 27 வருஷமாச்சுங்க. பல பகுதிகளில் பணிபுரிந்தாலும், 'பி 8' டவுன் பஸ் பத்தாண்டுகளாக ஓட்டி வருகிறேன். பல்லடம் - மலுமிச்சம்பட்டி (வழி: செட்டிபாளையம்) செல்லும் இந்த பஸ் தான் எங்களுடையது. இன்னைக்கு டியூட்டினு தெரிஞ்சிருச்சினா, ஒரு மணி நேரம் முன்னாடியே வேலைக்கு போக ரெடியாயிடுவேன்.
பஸ் இயக்கத்தை துவங்கும் போதே, நேர மேலாண்மை கடைப்பிடிக்க வேண்டும் என எண்ணி விடுவேன். சிக்னல், போக்குவரத்து நெரிசலால் ஒரிரு நிமிடம் தாமதமாகி விட்டாலும், அதற்கேற்க அடுத்தடுத்த ஸ்டாப், பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் இயக்குவேன். அவசரமில்லாமல், அனைத்து தரப்பு வாகனங்களும் போக்குவரத்து விதிகளை சரிவர கடைபிடித்து தங்களது வாகனங்களை சரிவர இயக்கினாலே, நேர மேலாண்மை பின்பற்ற முடியும்.

