/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி நதிக்கரையில் தொல்லியல் சான்றுகள்
/
அமராவதி நதிக்கரையில் தொல்லியல் சான்றுகள்
ADDED : பிப் 19, 2025 12:40 AM

உடுமலை:உடுமலை அருகே அமராவதி நதிக்கரையில், இரண்டடுக்கு கற்திட்டை, கற்கோடாரி, பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி நதிக்கரையில், குமணன் துறை, மாரக்கா பாறை பகுதியில், ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி தலைமையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த அருட்செல்வன், சிவகுமார், பிரதீப், ராஜாராம் உள்ளிட்டோர் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
மூர்த்தீஸ்வரி கூறியதாவது:
ஆண்பொருநை எனப்படும் அமராவதி நதிக்கரையில், 2,000 ஆண்டு பழமையான நதிக்கரை நாகரிகம் இருந்ததும், கரை வழி நாடுகள், ராஜராஜவள நாடுகள் இருந்ததற்கான சான்றுகள், கடையேழு வள்ளல்களுக்கு பிறகு குமணன் என்ற மன்னன் ஆட்சி செய்தது உள்ளிட்ட வரலாறுகள், கல்வெட்டுகள், சங்க கால பாடல்கள் வாயிலாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, குருவிக்களத்திற்கும், குமணன் துறைக்கு அருகில் மாரக்கா பாறை என்ற இடத்தில், கோவில் மேடு என இப்பகுதி மக்களால் அறியப்படும் பகுதியில், 20 வரிகளுக்கு மேல் உள்ள கல்வெட்டும், 'ஸ்லஸ்ஸ்ரீ' என்னும் எழுத்தோடு துவங்கி, அரசர்களை பற்றியும், நில தானங்கள் குறித்த தகவல்களும் உள்ளன.
மேலும், பெரிய அளவிலான கற்திட்டைகளும், உள்ளே முதுமக்கள் தாழி இருப்பதற்கான கருப்பு, சிவப்பு வண்ண ஓடுகளும் காணப்படுகின்றன. மேலும், கற்துாண்களும், பெருங்கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட, 15 இன்ச் அகலம், 3 இன்ச் நீளத்தில், பெரிய செங்கற்களும் அதிகளவு உள்ளன.
பெருங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள், அவற்றை இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் அகழாய்வு செய்தால், ஏராளமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.