/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்கள்; அதிகாரி சொன்ன ஆக்கபூர்வ யோசனை
/
பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்கள்; அதிகாரி சொன்ன ஆக்கபூர்வ யோசனை
பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்கள்; அதிகாரி சொன்ன ஆக்கபூர்வ யோசனை
பி.ஏ.பி., விவசாயிகளே... நவீன திட்டத்தை முன்னெடுங்கள்; அதிகாரி சொன்ன ஆக்கபூர்வ யோசனை
ADDED : ஜூலை 13, 2025 11:52 PM

பல்லடம்; பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் பாசன சபை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்த தண்டபாணி தலைமை வகித்து பேசியதாவது:
பாசன விவசாயிகள் பலர் பி.ஏ.பி., வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தி வருகின்றனர். நான்காயிரத்து ஐநுாறு கோடி ரூபாய்க்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதிக்கு சென்று தற்போது நிதித்துறை வசம் உள்ளது. அடுத்த தலைமுறை விவசாயிகளும் விவசாயத்தை செழிப்பாக செய்ய வேண்டுமானால், இத்திட்டத்தைக் காப்பாற்றியாக வேண்டும். நிதியாதாரமே சவாலாக உள்ளது.
வாய்க்கால் - நீர் பங்கீடு பிரச்னை என, ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது சாத்தியமல்ல.
அதிகாரிகள் என்னதான் அரசிடம் கூறினாலும், விவசாயிகளான நீங்கள் முன்னெடுத்துச் சென்றால்தான் எந்த ஒரு திட்டமும் நிறைவேறும். பி.ஏ.பி.,யில் தண்ணீர் வரும் வரை மட்டுமே பேசும் நீங்கள், நீர் வந்துவிட்டால், அதன் பிறகு அனைத்தையும் மறந்து விடுகிறீர்கள். விவசாயத்தை செழிப்பாகவும், லாபகரமான தொழிலாகவும் மாற்ற வேண்டுமானால், தொழில்நுட்ப ரீதியாக பி.ஏ.பி.,யை கட்டமைக்க வேண்டும். இது, விவசாயிகளான நீங்கள் மனது வைத்தால் தான் முடியும்.
பகிர்மான குழு தலைவர்கள் பாசன சபை தலைவர்கள் மற்றும் பாசன விவசாயிகள் என, அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து தீர்க்கமான முடிவெடுங்கள். தொழில்நுட்ப ரீதியாக பி.ஏ.பி.,யை கட்டமைக்கவும், அடுத்த தலைமுறை விவசாயிகளுக்கு, தடையின்றி தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
---
பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்த பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் பாசன சபை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்த தண்டபாணி பேசினார்.