/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமூகம் மீது அக்கறை; தேடி வந்தது விருது
/
சமூகம் மீது அக்கறை; தேடி வந்தது விருது
ADDED : டிச 21, 2024 11:25 PM

பிரதிபலன் கருதாத சமூக முன்னேற்றத்துக்கான சேவைதான், அரசு அலுவலர்களில் சிலரைத் தனித்து காட்டுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக, நால்வருக்கு, பாராட்டு சான்று மற்றும் கேடயத்தை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். விருது பெற்றோர், நம்முடன் பகிர்ந்தவை:
மாணவியர் உயர்கல்விக்கு உறுதுணை
ஸ்டெல்லா அமலோற்பவமேரி, தலைமையாசிரியர், ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி: கடந்த 2023-24ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, 1,096 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் முன்கூட்டியே நாங்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, 60 சதவீத மாணவியர் உயர்கல்வியில் இணைந்து விட்டனர். மீதமுள்ள மாணவர்களை கட்டாயம் உயர்கல்வியில் சேர்த்து விட வேண்டும் என்று உறுதிபூண்டு, இதற்கான பள்ளியில் ஆசிரியர்கள் கொண்ட குழுவை உருவாக்கினோம். ஒவ்வொரு குழுவுக்கும், 20 - 25 மாணவியரை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
குழுவில் இடம் பெற்ற ஆசிரியர்கள், மாணவியர் ஏன் உயர்கல்விக்கு செல்வில்லை என்பதை ஆராய்ந்தனர். படிப்பு முடித்த மாணவியரின் பெற்றோர் குடும்பச் சூழல், பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்தனர். அவர்களின் வீடுகளுக்கு சென்று, பெற்றோரிடம் பேசி, கல்லுாரிகளில் உயர்படிப்பில் உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர். சிரமப்பட்ட குழந்தைகளுக்கு சமூக நலத்துறை அதிகாரிகள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் குழு மூலம் உதவிகளை செய்தோம். தங்களால் இயன்ற உதவியை முன்னாள் மாணவியர் செய்தனர்.
சில இடங்களில் ஆசிரியர்களுக்கு எதிர்ப்பும் எழுந்தது. இருப்பினும், இறுதியில் ஆசிரியர் குழுவினரின் அறிவுரை பெற்றோரை மாற்றியது; மாணவியரும் உயர்கல்வி கற்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதனால், 2023 - 2024ம் கல்வியாண்டில், 97 சதவீத மாணவியர் உயர்கல்வியில் இணைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிந்தது. மீதமுள்ள மாணவியர்கள் 'நீட் ரிப்பீட்டர்ஸ்' தேர்வெழுதி வருகின்றனர். ஆசிரியர்கள், உதவியவர்களின் ஒட்டு மொத்த கூட்டு முயற்சியால், மாணவியரின் உயர்கல்விக்கு உதவ முடிந்தது.
போட்டித்தேர்வில் சாதித்த மாணவர்கள்
சுரேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில், அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் 200 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை, தன்னார்வலர்கள் உதவியோடு பெற்றுத்தருவதிலும், தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குவதிலும் கலெக்டர் மிகுந்த அக்கறை காட்டுகிறார். தனியார் பயிற்சி மையங்களைவிட, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள், அரசு போட்டித்தேர்வுகளில் சாதித்துகாட்டுகின்றனர். ஒரு அரசு அலுவலராக விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்கிற ஊக்கம் பிறந்துள்ளது.
ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி
ரியாஸ் அகமது பாஷா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்: அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படும் துறையாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளது. எங்கள் பணியின் முக்கியத்துவம் உணர்ந்து, செயல்படுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். எங்கள் முயற்சிகளை சாத்தியமாக்குவதில், தன்னார்வலர்கள், தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. கலெக்டரின் நேரடி அறிவுறுத்தலும், வழிகாட்டுதல்களும், தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது. விருது பெற்றதை, எங்கள் சிறப்பான பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.
1000 பட்டாக்கள் வினியோகம்
மோகனன், தாசில்தார், காங்கயம்: தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களிலும், வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான முன்னேற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு அரசு விழாவின் போது, பயனாளிகளை அழைத்து பட்டா வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஒன்பது தாலுகாக்களில் அதிகபட்சமாக, காங்கயம் தாலுகாவில், 1,000க்கும் அதிகமான பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுமனை பட்டா வழங்கும் அரசு பணியை சிறப்பாக செய்வதற்காக, காங்கயம் தாலுகா அலுவலகத்துக்கான விருதையும், பாராட்டு சான்றிதழையும் தாசில்தார் மோகனன் பெற்றுக்கொண்டார்.
அவர் கூறுகையில், ''அரசு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் திறம்பட செயல்பட்டனர். நடப்பு நிதியாண்டில், 1000க்கும் அதிகமான பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்; சிறப்பான பணியை பாராட்டி, விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.
மாணவியர் ஏன் உயர்கல்விக்கு செல்லவில்லை என்பதை ஆசிரியர்கள் ஆராய்ந்தனர். அவர்களின் வீடுகளுக்கு சென்று, பெற்றோரிடம் பேசி, கல்லுாரி களில் உயர்படிப்பில் உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர். சில இடங்களில் ஆசிரியர்களுக்கு எதிர்ப்பும் எழுந்தது. இருப்பினும், இறுதியில் ஆசிரியர் குழுவினரின் அறிவுரை பெற்றோரை மாற்றியது; மாணவியரும் உயர்கல்வி கற்க ஆர்வமுடன் முன்வந்தனர்.