/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் சாகுபடி மதிப்பீட்டாய்வு துவங்குகிறது
/
பயிர் சாகுபடி மதிப்பீட்டாய்வு துவங்குகிறது
ADDED : ஜூலை 30, 2025 10:10 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு ராபி பருவத்தில், 224 கிராமங்களிலும், காரீப் பருவத்தில், 72 கிராமங்களிலும் வேளாண், தோட்டக்கலை பயிர் சாகுபடி மற்றும் அறுவடை மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
பொது பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தில், ஆண்டுதோறும், அந்தந்த மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வேளாண், தோட்டக்கலை பயயிர்களின், பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு ஆய்வு பயிர்களுக்கும், சுழற்சி முறையில் சாகுபடி நிலம் தேர்வு செய்யப்பட்டு, பயிர் சாகுபடி மற்றும் அறுவடை விவரங்களை உள்ளடக்கிய, மதிப்பீட்டாய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு பயிர்களின் விளைச்சல், மொத்த உற்பத்தி விவரங்கள், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சி, தானிய உற்பத்தி, விவசாயிகளுக்கு தேவைப்படும் திட்டங்களை உருவாக்க இந்த ஆய்வுகள் கைகொடுக்கின்றன. பேரிடர் காலங்களின்போது பயிர்கள் பாதிக்கப்படும்போது, இழப்பீடு வழங்குவதற்கும் இது உதவுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், பொது மதிப்பீட்டாய்வு திட்டம் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு 1435 பசலி ஆண்டுக்கான (2025- 26) காரீப் மற்றும் ராபி பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. வேளாண், தோட்டக்கலை துறை அலுவலர்கள், 200 பேர் வரை இப்பணிகளில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, மண்டலம் வாரியாக, பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
உடுமலை, தாராபுரம் மண்டலங்களுக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் மதிப்பீட்டாய்வு களப்பணிகளில் ஈடுபட உள்ள வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் முடிவடைந்துள்ளன.
திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பூர், பல்லடம், பொங்கலுார், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய ஐந்து ஒன்றிய அலுவலர்களுக்கான இரண்டுநாள் பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று துவங்கியது. மாவட்ட புள்ளியியல் துறை இணை இயக்குனர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். புள்ளியியல் துறை கோவை மண்டல இணை இயக்குனர் ஜெரீனா துவக்கிவைத்தார்.
வேளாண் துணை இயக்குனர் பாமா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா, மாவட்ட புள்ளியியல் அலுவலர் மணிமாறன் ஆகியோர், பயிற்சி அளித்தனர்.
--
பயிர் சாகுபடி - அறுவடை மதிப்பீட்டாய்வு குறித்த பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா பயிற்சி அளித்தார். அருகில், வேளாண் துணை இயக்குனர் பாமா, புள்ளியியல் துறை துணை இயக்குனர் இசக்கியப்பன், புள்ளியியல் அலுவலர் மணிமாறன்.
இதில் பங்கேற்ற வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்.