/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலையில் சிதிலமடைந்த கற்துாண்கள் பழமையான கோவில் இருந்ததற்கான சான்று
/
உடுமலையில் சிதிலமடைந்த கற்துாண்கள் பழமையான கோவில் இருந்ததற்கான சான்று
உடுமலையில் சிதிலமடைந்த கற்துாண்கள் பழமையான கோவில் இருந்ததற்கான சான்று
உடுமலையில் சிதிலமடைந்த கற்துாண்கள் பழமையான கோவில் இருந்ததற்கான சான்று
ADDED : பிப் 27, 2026 06:11 AM

உடுமலை: உடுமலை கல்லாபுரம் பகுதியில், சிதிலமடைந்த புடைப்புச்சிற்பங்கள், கல் துாண்கள், தீபத்துாண் ஆகியவற்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.
கல்லாபுரம், அமராவதி ஆற்றின் கரை வழியில் அமைந்துள்ளதால், கொங்கு நாட்டின் கரைவழி நாடு எனவும், விக்கிரம சோழ நல்லுார் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
இக்கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள, வனப்பகுதியில் கோபால்சாமி கோவில் உள்ளது.
இங்கு குத்துக்கல் நடுகல் உள்ள நிலையில், சிதிலமடைந்த கற்துாண்கள், புடைப்புச்சிற்பங்கள் உள்ள கற்துாண்கள், தீபத்தூண் என வரலாற்றுச்சுவடுகள் சிதறி கிடக்கின்றன.
இதனை, ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல் அறிஞர் மூர்த்தீஸ்வரி தலைமையிலான, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த அருட்செல்வன், சிவக்குமார், தமிழ்ப்பேராசிரியர் ஜெய்சிங் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தியுள்ளனர்.
தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:
இந்த இடத்தில் பெரிய மண்டபம் இருந்ததற்கான சான்றுகளாக, இந்த கற்தூண்கள் காணப்படுகின்றன. கற்துாண்களிலுள்ள சிற்பங்களில் வைணவ வழிபாட்டை குறிக்கும் கிருஷ்ணர் புடைப்புச்சிலை இருக்கும், மூன்று கற்துாண்கள் உள்ளன.
இதில் ஒன்றில், அரசன் அல்லது தலைவன் கைகூப்பி வழிபட்டு நிற்பது போன்றும், இன்னொன்றில் ஒரு தலைவன் அல்லது வீரன், கையில் பெரிய உடைவாளோடு நிற்பது போன்றும் புடைப்புச்சிற்பங்கள் இருக்கின்றது.
இங்கு கற்கள் இல்லாத நிலையில், வேறு எங்கேயோ இருந்து, இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
துாண்கற்கள் புடைப்புச் சிற்பம் செய்ய செதுக்கப்பட்ட துாண்களும், செதுக்காமல் பகுதி வேலை முடிந்த அளவில் இரண்டு கற்துாண்களும், எண்கோண வடிவத்தில் செதுக்கப்பட்ட இரண்டு துாண்களும் இருக்கின்றது. சிதிலடைந்து போன விநாயகர் சிலையும், இப்பகுதிக்கு அருகில் காணப்படுகிறது.
இந்த, கற்துாண்கள் சுமார், 300 அல்லது, 350 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவும், பாளையக்காரர்கள் ஆட்சி செய்த பொழுது இந்த வைணவக்கோயில் கட்ட முயற்சி செய்திருக்கலாம்.
மேலும், பாளையக்காரர்கள் பெருமாள் வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்ததால், புடைப்புச்சிற்பத்தில் கிருஷ்ணரை வழிபட்டிருக்கலாம். இதன் தொடர்ச்சியாகவே, இப்பகுதி கோபால்சாமி கோவில் என அழைக்கப்படுகிறது.
இதற்கு அருகில், துருவத்துக் கரடு எனும், மலைப்பகுதியில் திப்பு சுல்தான் வந்து தங்கிச்சென்றமைக்கான சான்றுகளும் இருப்பதாக, கரை வழி நாடும் நாகரிகமும் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உடுமலைப்பேட்டைக்கு முந்தைய வருவாய் கிராமமாக, சக்கரகிரிக்கோட்டை எனும் பகுதியாக இவ்விடம் செயல்பட்டுள்ளது.
இவ்வாறு, தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார்.

