ADDED : நவ 14, 2024 11:35 PM

திருப்பூர் ; உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்தார். இச்சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் பணியை முடித்த பின் போராட்டத்தில் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவ மாணவர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
